Friday, August 3, 2018

சிலுவை மொழிகள் 5





“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28

இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி ! வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் தாகமாய் இருக்கிறது என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.

“தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.

‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல். “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள் ( சங்கீதம் 69:21 ) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது. “என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது ( சங்கீதம் 22:5 ) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.

பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்கத் தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத் தெளிவான விளக்கமே இது.

“தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன் என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன் என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’ !. நரகம் தாகத்தின் இடம். “இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும் (லூக்கா 16:24)’ என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது. உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.

‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு. “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் ( பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம்.

மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டுமல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறைவேறியது.

‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார். என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும் என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.

இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம் !. நமது தாகம் எதில் இருக்கிறது ? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா ? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா ?

கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள். என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார். காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம் ! பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம் ? பாவத்தில் பயணிக்கவா ? இறைவனில் பயணிக்கவா ?


“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார். இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது தாகம் தணிகிறது.

No comments:

Post a Comment