Monday, June 18, 2018

விசுவாசமே சுவாசம்


நம்பிக்கையை குறித்து
இயேசு
இடைவிடாமல் போதித்தார்.

நம்பிக்கையே
செயல்களின் மையம்.

விசுவாசத்தோடு கட்டளையிட்டால்
மலையும் உருண்டு
கடலில் விழும்.
மரமும் பெயர்ந்து
இடம் மாறி நிற்கும்.

நம்புங்கள்
அதுவே வாழ்வுக்கான
நெம்புகோல் என்பதே
இறைமகன் போதனை.


தொடர் முயற்சியின்
தோள்களுக்கே
மரியாதையின் மாலைகள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்கள்.

மீட்டாமல்
வீணையில் சுரமில்லை.
தவமில்லாமல்
தரப்படும் வரமுமில்லை.

உங்கள் செல்லப்பிள்ளை
பசி தீர்க்க,
கற்கள் தரும் தகப்பனில்லை.
மீன் கேட்டால்
பாம்பு தரும் பெற்றோருமில்லை.
உன் தந்தையே
இப்படியென்றால்
உலகத் தந்தை எப்படி இருப்பார்
என்பதை உணர்.

No comments:

Post a Comment