இயேசு செய்த புதுமைகள் 11 : யாயிர் மகள் குணமடைதல்
மத்தேயு 9:18, 19, 23..26
மார்க் 5 : 21..24; 35..43
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.
அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
***
யாயீர் என்பவர் யூதர்களுடைய தொழுகைக் கூடம் ஒன்றின் தலைவர். அவருடைய மகள் சாகும் தருவாயில் இருந்தபோது அவர் இயேசுவைத் தேடி வருகிறார். பணம், செல்வாக்கு, மதம் எதுவும் கை கொடுக்காத சூழலில் அவர் வாழ்வளிக்கும் இறைவனைத் தேடி வருகிறார். இயேசு வரும் முன் அந்த சிறுமி இறந்து விடுகிறார். இயேசு இறந்து போன அந்த சிறுமிக்கு உயிர் கொடுக்கிறார்.
இந்த இறைவார்த்தைகள் நமக்கு பல்வேறு சிந்தனைகளை தருகின்றன.
1. தனது மகள் சாகும் தருவாயில் இருக்கும் போது யாயீர் சரியான முடிவை எடுக்கிறார். வாழ்வளிக்கும் இயேசுவைத் தேடி வருகிறார். மகள் எப்போதுவேண்டுமானாலும் இறக்கலாம் எனும் நிலை. அழுகின்ற தாய்க்கு ஆறுதலாய் இருக்க வேண்டுமே எனும் சிந்தனை ஒரு புறம் அழுத்த அவர் இயேசுவைத் தேடிச் செல்ல முடிவெடுக்கிறார்.
‘மரணத்துக்காகக் காத்திருக்காமல், வாழ்வைத் தேடிச் சென்றார்” யாயீர். நமது வாழ்க்கையிலும் பல்வேறு சூழல்கள் நம்மை எழவிடாமல் அழுத்திப் பிடிக்கின்றன. அப்போது நாம் என்ன செய்கிறோம் ?. வாழ்வளிக்கும் இறைவனைத் தேடிச் செல்கிறோமா ? இல்லை வீழ்ந்த இடத்திலேயே கிடக்கிறோமா என சிந்திப்போம். நமது வாழ்வில் பாவத்தினால் செத்துக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோமா, பாவத்திலிருந்து மீட்பவரைத் தேடிச் செல்கிறோமா ?
2. யாயீர் என்பவர் தொழுகைக் கூடத்தின் தலைவன். ஊரில் அனைவராலும் மதிக்கப்படுபவன். மத சிந்தனைகளில் ஊறியவன். ஆன்மீகவாதி என மக்களால் மரியாதையோடு பார்க்கப்படுபவன். இயேசுவைத் தேடிச் சென்றால் அவருடைய சக மதவாதிகளால் தூற்றப்படலாம், அல்லது இவரது ஆன்மீக பலத்தை மக்கள் சந்தேகப்படலாம். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இயேசுவைத் தேடிச் சென்றார்.
தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். குறை கண்டுபிடிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் குறைகண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் பிறருடைய கருத்துகளுக்குப் பயந்து அமைதியாய் இருக்கிறோமா ? போலியான அந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி இயேசுவைத் தேடிச் செல்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்
3. இயேசுவை நெருங்கிய அவர் அவருடைய பாதங்களில் விழுகிறார். மரியாதை பெற்றுப் பழக்கப்பட்ட மனிதர் இப்போது மரியாதை கொடுக்க வருகிறார். நமது கர்வத்தின் அத்தனை கிரீடங்களையும் உடைத்து தாழ்மையின் தாழ்வாரங்களில் நடக்கும் போது தான் இயேசுவின் வழியில் வருகிறோம் என்று அர்த்தம். நம்மை முற்றிலும் தாழ்த்தி இறைவனின் பாதத்தில் விழும்போது மட்டுமே வாழ்க்கையில் எழ முடியும்.
யாயீர் என்பவர் செய்த அந்த செயல், அவர் தனது அத்தனை அந்தஸ்தையும் கழற்றி விட்டு முழுமையாய் இயேசுவை நம்பி வந்தார் என்பதன் அடையாளம். நமது வாழ்விலும் இயேசுவின் பாதத்தில் விழ தடையாய் இருக்கும் அத்தனை பெருமைகளையும் தாண்டுவோம்.
4. “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என இயேசுவிடம் வேண்டுகிறார் யாயீர். தனது மகள் சாகும் நிலையில் இருக்கிறார். எல்லா மருத்துவ வழிகளையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று. எல்லாரும் செபித்தும் பார்த்தாயிற்று. கடைசி சரண் இயேசு மட்டுமே. அதையே யாயீர் செய்தார். ஆனால் இயேசு நேரடியாய் வந்து அவள் மீது கையை வைத்தால் மட்டுமே அவள் பிழைத்துக் கொள்வாள் என அவர் நினைக்கிறார்.
“இயேசுவால் முடியும்” என்பதை நம்பும் நாமும், பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அவர் நமக்கு உதவி செய்ய முடியும் என அவருடைய வல்லமையை குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். நமது வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லும் போது, எப்படி அவர் செயல்படவேண்டும் எனும் நிபந்தனைகள் விதிப்பது அறிவீனம் என்பதை உணர்வோம்.
5. “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என யாயீரின் மகள் இறந்ததும் தகவல் வருகிறது. யாயீர் உடைந்து போகிறார். செய்தி கொண்டு வந்தவர்களுடைய மனநிலையோ “இனிமேல் இயேசுவாலும் முடியாது” என்பதாகத் தான் இருந்தது. உயிர் இருந்தபோது வந்திருந்தால் ஒருவேளை சுகமாக்கியிருக்கலாம், ஆனால் இறந்த பின் நிச்சயம் முடியவே முடியாது என்பதே அவர்களுடைய எண்ணமாய் இருந்தது.
இயேசுவை நாமும் பல வேளைகளில் இப்படித் தான் பார்க்கிறோம். ஒரு காய்ச்சல் வந்தால் இயேசுவிடம் வருவதில்லை, நாலு நாளாக காய்ச்சல் விடாவிட்டால் இயேசுவிடம் வருகிறோம், ஒருவேளை இனிமேல் பிழைக்க முடியாது எனும் நோய் என சொல்லிவிட்டால், “இயேசுவாலும் முடியாது” எனும் நிலமைக்கு வந்து விடுகிறோம். நமக்கு வந்த, வருகின்ற, வரப்போகின்ற எல்லா பிரச்சினைகளை விடவும் இயேசு பெரியவர் எனும் உண்மை நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.
6. தனது மகள் இறந்த செய்தி யாயீரை உடைத்திருக்கும். வரும் வழியில் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தால் மகள் பிழைத்திருப்பாள் என நினைத்திருக்கலாம். வரும் வழியில் இயேசு நேரம் செலவிட்டு பன்னிரண்டு ஆண்டு நோயால் வாடிய ஒரு பெண்ணுக்கு சுகமளித்திருந்தார். ஒருவேளை இயேசு அப்படி நேரம் செலவிடாமல் இருந்திருக்க வேண்டும் என யாயீர் நினைத்திருக்கலாம்.
நமது வாழ்க்கையிலும் இயேசு நமது செபங்களுக்குப் பதிலளிக்க காலம் தாழ்த்துவது போல நாம் உணரலாம். நாம் கேட்டபின் செபம் செய்த பலருக்கு செபத்துக்கான பதில் வந்திருக்கலாம். நம்முடைய செபத்துக்கான பதில் தாமதமாகியிருக்கலாம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் சினியாரிடி பார்த்து செபத்துக்கு பதில் கொடுப்பவர் அல்ல. இயேசுவின் நேரம் கன கட்சிதம். அது எப்போது என்பதை அவரே அறிவார்.
7. “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என இயேசு யாயீரிடம் சொல்கிறார். மகள் இறந்து விட்டாள் என மக்கள் சொன்னது யாயீரின் நம்பிக்கையை உடைத்தது. இனிமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது எனும் சிந்தனை அவருடைய மனதிலும் எழுந்திருக்கலாம். கவலையும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்கிறார். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அச்சம் இருப்பதில்லை. எங்கே அச்சம் இருக்கிறதோ அங்கே நம்பிக்கை விடைபெற்று விடுகிறது.
நமது வாழ்விலும் நாம் பல்வேறு விஷயங்களை இறைவனிடம் கேட்கிறோம். சில நிகழ்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. சில நோய்கள், சில வேலைகள், சில பிசினஸ் விஷயங்கள், சில பாதுகாப்பு விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. அனைத்தையும் இயேசு பார்த்துக் கொள்வார் எனும் விசுவாசம் நம்மை பயமில்லாமல் இயங்க வைக்கும். அத்தகைய விசுவாசம் வேண்டும் என்கிறார் இயேசு.
8 “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என இயேசு சொன்னபோது மக்கள் நகைத்தார்கள். அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது நித்திரை. நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நித்திரை. மக்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நகைத்தார்கள். இயேசு கவலைப்படவில்லை. தன்னை நகைப்பவர்களையோ, ஏளனம் செய்பவர்களையோ அவர் என்றைக்குமே பொருட்படுத்தியதில்லை. அமைதியாக தனது வேலையைப் பார்த்தார்.
நாமும், நமது வாழ்க்கையில் இயேசுவை நகைக்கும் பலரைச் சந்திக்கிறோம். அவை நம்மைக் காயப்படுத்தக் கூடாது. அது நிந்திப்பவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விஷயம் என விட்டு விட வேண்டும். ‘பழிவாங்குதல் என் வேலை’ எனும் இறைவனின் வார்த்தையை மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை எந்த வகையிலும் நகைப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது.
9. “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என பொருள் படும் தலித்தாகூம் எனும் வார்த்தையை இயேசு சொன்னதும் சிறுமி உயிர்பெற்று எழுந்தார். நானே வாழ்வும் உயிரும் என்றவர் இயேசு. அதை இங்கே நிரூபிக்கிறார். வாழ்க்கை வந்ததும் மரணம் தோற்று விடுகிறது. வாழ்வின் வார்த்தைகள் மரணத்தின் கல்லறைகளை உடைக்கின்றன. வெளிச்சம், இருளை விரட்டி விடுகிறது.
நமது வாழ்க்கையில் பாவத்தின் ஆளுமை நம்மை இறந்தவர்களாக மாற்றி விடலாம். அப்போது இறைவனுடைய வார்த்தைகளே நம்மை திரும்ப அழைத்து வரும் ஆயுதம் என்பதை உணர வேண்டும். இறைவனுடைய வார்த்தைகளை நமது வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டு பாவம் எனும் மரண பள்ளத்திலிருந்து வெளியே வர வேன்டும்.
10. “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என இயேசு கட்டளையிட்டார். இயேசுவின் முதன்மைப் பணி நலமளிப்பதோ, உயிரளிப்பதோ அல்ல பாவத்தில் வாழும் மக்களுக்கு மீட்பளிப்பது. எனவே தான் தன்னை நாடி வரும் மக்கள் உலகத் தேவைகளை விட விண்ணகத் தேவைகளையே விரும்பி வர வேண்டும் என இயேசு விரும்பினார். எனவே தான் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் அந்த சிறுமிக்கு உணவு கொடுக்கச் சொன்னார். அது அவர் உலகத் தேவைகளை உதாசீனம் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடு.
நாமும் இயேசுவை எதற்காக அணுகுகிறோம் ? எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். நமது தேடல் உலக செல்வங்களா, இறைமகனா ? தேவைகளற்ற தேடலே இறைவனின் விருப்பம். நாம் மீட்புக்காக இறைவனைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.