Wednesday, August 29, 2018

யாயிர் மகள் குணமடைதல்



இயேசு செய்த புதுமைகள் 11 : யாயிர் மகள் குணமடைதல்

மத்தேயு 9:18, 19, 23..26
மார்க் 5 : 21..24; 35..43


இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

***

யாயீர் என்பவர் யூதர்களுடைய தொழுகைக் கூடம் ஒன்றின் தலைவர். அவருடைய மகள் சாகும் தருவாயில் இருந்தபோது அவர் இயேசுவைத் தேடி வருகிறார். பணம், செல்வாக்கு, மதம் எதுவும் கை கொடுக்காத சூழலில் அவர் வாழ்வளிக்கும் இறைவனைத் தேடி வருகிறார். இயேசு வரும் முன் அந்த சிறுமி இறந்து விடுகிறார். இயேசு இறந்து போன அந்த சிறுமிக்கு உயிர் கொடுக்கிறார்.

இந்த இறைவார்த்தைகள் நமக்கு பல்வேறு சிந்தனைகளை தருகின்றன.

1. தனது மகள் சாகும் தருவாயில் இருக்கும் போது யாயீர் சரியான முடிவை எடுக்கிறார். வாழ்வளிக்கும் இயேசுவைத் தேடி வருகிறார். மகள் எப்போதுவேண்டுமானாலும் இறக்கலாம் எனும் நிலை. அழுகின்ற தாய்க்கு ஆறுதலாய் இருக்க வேண்டுமே எனும் சிந்தனை ஒரு புறம் அழுத்த அவர் இயேசுவைத் தேடிச் செல்ல முடிவெடுக்கிறார்.

‘மரணத்துக்காகக் காத்திருக்காமல், வாழ்வைத் தேடிச் சென்றார்” யாயீர். நமது வாழ்க்கையிலும் பல்வேறு சூழல்கள் நம்மை எழவிடாமல் அழுத்திப் பிடிக்கின்றன. அப்போது நாம் என்ன செய்கிறோம் ?. வாழ்வளிக்கும் இறைவனைத் தேடிச் செல்கிறோமா ? இல்லை வீழ்ந்த இடத்திலேயே கிடக்கிறோமா என சிந்திப்போம். நமது வாழ்வில் பாவத்தினால் செத்துக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோமா, பாவத்திலிருந்து மீட்பவரைத் தேடிச் செல்கிறோமா ?

2. யாயீர் என்பவர் தொழுகைக் கூடத்தின் தலைவன். ஊரில் அனைவராலும் மதிக்கப்படுபவன். மத சிந்தனைகளில் ஊறியவன். ஆன்மீகவாதி என மக்களால் மரியாதையோடு பார்க்கப்படுபவன். இயேசுவைத் தேடிச் சென்றால் அவருடைய சக மதவாதிகளால் தூற்றப்படலாம், அல்லது இவரது ஆன்மீக பலத்தை மக்கள் சந்தேகப்படலாம். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இயேசுவைத் தேடிச் சென்றார்.

தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். குறை கண்டுபிடிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் குறைகண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் பிறருடைய கருத்துகளுக்குப் பயந்து அமைதியாய் இருக்கிறோமா ? போலியான அந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி இயேசுவைத் தேடிச் செல்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்

3. இயேசுவை நெருங்கிய அவர் அவருடைய பாதங்களில் விழுகிறார். மரியாதை பெற்றுப் பழக்கப்பட்ட மனிதர் இப்போது மரியாதை கொடுக்க வருகிறார். நமது கர்வத்தின் அத்தனை கிரீடங்களையும் உடைத்து தாழ்மையின் தாழ்வாரங்களில் நடக்கும் போது தான் இயேசுவின் வழியில் வருகிறோம் என்று அர்த்தம். நம்மை முற்றிலும் தாழ்த்தி இறைவனின் பாதத்தில் விழும்போது மட்டுமே வாழ்க்கையில் எழ முடியும்.

யாயீர் என்பவர் செய்த அந்த செயல், அவர் தனது அத்தனை அந்தஸ்தையும் கழற்றி விட்டு முழுமையாய் இயேசுவை நம்பி வந்தார் என்பதன் அடையாளம். நமது வாழ்விலும் இயேசுவின் பாதத்தில் விழ தடையாய் இருக்கும் அத்தனை பெருமைகளையும் தாண்டுவோம்.

4. “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என இயேசுவிடம் வேண்டுகிறார் யாயீர். தனது மகள் சாகும் நிலையில் இருக்கிறார். எல்லா மருத்துவ வழிகளையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று. எல்லாரும் செபித்தும் பார்த்தாயிற்று. கடைசி சரண் இயேசு மட்டுமே. அதையே யாயீர் செய்தார். ஆனால் இயேசு நேரடியாய் வந்து அவள் மீது கையை வைத்தால் மட்டுமே அவள் பிழைத்துக் கொள்வாள் என அவர் நினைக்கிறார்.

“இயேசுவால் முடியும்” என்பதை நம்பும் நாமும், பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அவர் நமக்கு உதவி செய்ய முடியும் என அவருடைய வல்லமையை குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். நமது வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லும் போது, எப்படி அவர் செயல்படவேண்டும் எனும் நிபந்தனைகள் விதிப்பது அறிவீனம் என்பதை உணர்வோம்.

5. “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என யாயீரின் மகள் இறந்ததும் தகவல் வருகிறது. யாயீர் உடைந்து போகிறார். செய்தி கொண்டு வந்தவர்களுடைய மனநிலையோ “இனிமேல் இயேசுவாலும் முடியாது” என்பதாகத் தான் இருந்தது. உயிர் இருந்தபோது வந்திருந்தால் ஒருவேளை சுகமாக்கியிருக்கலாம், ஆனால் இறந்த பின் நிச்சயம் முடியவே முடியாது என்பதே அவர்களுடைய எண்ணமாய் இருந்தது.

இயேசுவை நாமும் பல வேளைகளில் இப்படித் தான் பார்க்கிறோம். ஒரு காய்ச்சல் வந்தால் இயேசுவிடம் வருவதில்லை, நாலு நாளாக காய்ச்சல் விடாவிட்டால் இயேசுவிடம் வருகிறோம், ஒருவேளை இனிமேல் பிழைக்க முடியாது எனும் நோய் என சொல்லிவிட்டால், “இயேசுவாலும் முடியாது” எனும் நிலமைக்கு வந்து விடுகிறோம். நமக்கு வந்த, வருகின்ற, வரப்போகின்ற எல்லா பிரச்சினைகளை விடவும் இயேசு பெரியவர் எனும் உண்மை நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.

6. தனது மகள் இறந்த செய்தி யாயீரை உடைத்திருக்கும். வரும் வழியில் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தால் மகள் பிழைத்திருப்பாள் என நினைத்திருக்கலாம். வரும் வழியில் இயேசு நேரம் செலவிட்டு பன்னிரண்டு ஆண்டு நோயால் வாடிய ஒரு பெண்ணுக்கு சுகமளித்திருந்தார். ஒருவேளை இயேசு அப்படி நேரம் செலவிடாமல் இருந்திருக்க வேண்டும் என யாயீர் நினைத்திருக்கலாம்.

நமது வாழ்க்கையிலும் இயேசு நமது செபங்களுக்குப் பதிலளிக்க காலம் தாழ்த்துவது போல நாம் உணரலாம். நாம் கேட்டபின் செபம் செய்த பலருக்கு செபத்துக்கான பதில் வந்திருக்கலாம். நம்முடைய செபத்துக்கான பதில் தாமதமாகியிருக்கலாம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் சினியாரிடி பார்த்து செபத்துக்கு பதில் கொடுப்பவர் அல்ல. இயேசுவின் நேரம் கன கட்சிதம். அது எப்போது என்பதை அவரே அறிவார்.

7. “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என இயேசு யாயீரிடம் சொல்கிறார். மகள் இறந்து விட்டாள் என மக்கள் சொன்னது யாயீரின் நம்பிக்கையை உடைத்தது. இனிமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது எனும் சிந்தனை அவருடைய மனதிலும் எழுந்திருக்கலாம். கவலையும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்கிறார். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அச்சம் இருப்பதில்லை. எங்கே அச்சம் இருக்கிறதோ அங்கே நம்பிக்கை விடைபெற்று விடுகிறது.

நமது வாழ்விலும் நாம் பல்வேறு விஷயங்களை இறைவனிடம் கேட்கிறோம். சில நிகழ்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. சில நோய்கள், சில வேலைகள், சில பிசினஸ் விஷயங்கள், சில பாதுகாப்பு விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. அனைத்தையும் இயேசு பார்த்துக் கொள்வார் எனும் விசுவாசம் நம்மை பயமில்லாமல் இயங்க வைக்கும். அத்தகைய விசுவாசம் வேண்டும் என்கிறார் இயேசு.

8 “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என இயேசு சொன்னபோது மக்கள் நகைத்தார்கள். அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது நித்திரை. நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நித்திரை. மக்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நகைத்தார்கள். இயேசு கவலைப்படவில்லை. தன்னை நகைப்பவர்களையோ, ஏளனம் செய்பவர்களையோ அவர் என்றைக்குமே பொருட்படுத்தியதில்லை. அமைதியாக தனது வேலையைப் பார்த்தார்.

நாமும், நமது வாழ்க்கையில் இயேசுவை நகைக்கும் பலரைச் சந்திக்கிறோம். அவை நம்மைக் காயப்படுத்தக் கூடாது. அது நிந்திப்பவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விஷயம் என விட்டு விட வேண்டும். ‘பழிவாங்குதல் என் வேலை’ எனும் இறைவனின் வார்த்தையை மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை எந்த வகையிலும் நகைப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது.

9. “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என பொருள் படும் தலித்தாகூம் எனும் வார்த்தையை இயேசு சொன்னதும் சிறுமி உயிர்பெற்று எழுந்தார். நானே வாழ்வும் உயிரும் என்றவர் இயேசு. அதை இங்கே நிரூபிக்கிறார். வாழ்க்கை வந்ததும் மரணம் தோற்று விடுகிறது. வாழ்வின் வார்த்தைகள் மரணத்தின் கல்லறைகளை உடைக்கின்றன. வெளிச்சம், இருளை விரட்டி விடுகிறது.

நமது வாழ்க்கையில் பாவத்தின் ஆளுமை நம்மை இறந்தவர்களாக மாற்றி விடலாம். அப்போது இறைவனுடைய வார்த்தைகளே நம்மை திரும்ப அழைத்து வரும் ஆயுதம் என்பதை உணர வேண்டும். இறைவனுடைய வார்த்தைகளை நமது வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டு பாவம் எனும் மரண பள்ளத்திலிருந்து வெளியே வர வேன்டும்.

10. “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என இயேசு கட்டளையிட்டார். இயேசுவின் முதன்மைப் பணி நலமளிப்பதோ, உயிரளிப்பதோ அல்ல பாவத்தில் வாழும் மக்களுக்கு மீட்பளிப்பது. எனவே தான் தன்னை நாடி வரும் மக்கள் உலகத் தேவைகளை விட விண்ணகத் தேவைகளையே விரும்பி வர வேண்டும் என இயேசு விரும்பினார். எனவே தான் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் அந்த சிறுமிக்கு உணவு கொடுக்கச் சொன்னார். அது அவர் உலகத் தேவைகளை உதாசீனம் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடு.

நாமும் இயேசுவை எதற்காக அணுகுகிறோம் ? எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். நமது தேடல் உலக செல்வங்களா, இறைமகனா ? தேவைகளற்ற தேடலே இறைவனின் விருப்பம். நாம் மீட்புக்காக இறைவனைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்


லூக்கா 7 : 1 முதல் 10 வரை




இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.

அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.



நூற்றுவர் தலைவன் என்பவன் குறைந்தபட்சம் நூறு படை வீரர்களின் தலைவன். ரோம அரசைச் சார்ந்தவர். ரோமர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் யூதரான இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறான். அதுவும் இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் அவரது ஊழியர் குணமாவார் எனும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது. அவர் அந்த ஊழியனை ஒரு வார்த்தை கூட வெளிப்படையாய் சொல்லாமல் குணமாக்குகிறார் !

இந்த நிகழ்வு பல ஆன்மீகச் சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

1. அந்த நூற்றுவர் தலைவன் ஒரு சிறந்த மனிதனாக காட்சியளிக்கிறார்.

முதலாவதாக, இன பேதத்தை அவர் கடக்கிறார். தான் ஒரு ரோமர், இயேசு ஒரு யூதர் எனும் எல்லைகளைக் கடக்கிறார். யூத மக்களோடு தொடர்பில் இருக்கிறார். யூதர்களுக்கு நன்மைகள் செய்கிறார்.

இரண்டாவதாக, பொருளாதார பேதங்களைக் கடக்கிறார். தனது வீட்டில் பணி செய்யும் ஒரு வேலைக்காரனுக்காக தனது நிலையை விட்டு இறங்கி வருகிறார். தனது வேலைக்காரருக்கு, தானே வேலைக்காரனாய் மாறிப் போகிறார்.

மூன்றாவதாக தனது அந்தஸ்து, புகழ் போன்றவற்றைக் கடக்கிறார். அனைத்தையும் விட்டு விட்டு ஒரு ஏழை ஊழியனுக்காக மனமிரங்கி வருகிறார். தனது அந்தஸ்துக்கு சரிக்குச் சமமானவர்களை மட்டுமே மக்கள் மதிப்பது வழக்கம். இங்கே நூற்றுவர் தலைவன் அந்த மதில் சுவரையும் உடைக்கிறார்.

நான்காவதாக‌, மத பேதங்களைக் கடக்கிறார். யூத மதத்தையும், யூத கடவுளையும் மதித்து அவர்களுக்காக தொழுகைக் கூடம் கட்டிக் கொடுக்கிறார்.

இப்படி பல வகைகளில் அன்பும், ஈகையும், சமத்துவமும் கலந்த ஒரு நல்ல பண்புடைய மனிதராக அவர் காட்சியளிக்கிறார்.

2. யூதர்களின் தலைவர்களோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. யூதத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். எனவே தான் இயேசுவிடம் பரிந்துரை செய்ய அவர் யூத மதத் தலைவர்களை அணுகுகிறார். அவர்களும், இயேசுவிடம் வந்து அவருக்காகப் பரிந்துரை செய்கின்றனர்.

இயேசுவை நேரில் சந்திக்க தனக்கு அருகதையில்லை என்று நம்பியதால் அந்த நூற்றுவர் தலைவர் யூதத் தலைவர்களை அணுகினார். பின்னர் நண்பர்களை அனுப்பினார். இன்றைய சூழலில் நாம் இறைவனிடம் நேரடியாகவே நமது விண்ணப்பங்களை வைக்க இறைவன் நமக்கு உரிமை அளித்திருக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அந்த வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. நம்முடன் கூடவே பயணிக்க‌ தூய ஆவியானவரை இயேசு தந்திருக்கிறார்.

3. யூதத் தலைவர்கள் நூற்றுவர்த் தலைவனை எப்படிப் பார்த்தார்கள் என்பது வியப்பான விஷயம். நூற்றுவர் தலைவனை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள். ரோமர்களுக்கும், யூதர்களுக்கும் எப்போதுமே பனிப்போர் தான் நடக்கும். வெறுப்பு தான் உமிழப்படும். ஆனால் இவரை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள்.

தொழுகைக் கூடம் கட்டிக் கொடுத்த பெருந்தன்மை உடையவராகப் பார்த்தார்கள். ஈகைக் குணம் அவருக்கு இருந்தது என்பதை இயேசுவிடம் சொல்கின்றனர். மிக முக்கியமாக, இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற, “தகுதியானவராக” பார்த்தார்கள். இப்படி அவரைப்பற்றிய புகழுரைகளை இயேசுவிடம் எடுத்து வைத்தார்கள்.

நாம் ஒரு நபருக்காக‌ இயேசுவிடம் வேண்டும்போது என்ன செய்கிறோம் ? அந்த நபருடைய நல்ல குணாதிசயங்களைப் பட்டியலிட்டு, அவர் இயேசுவின் இரக்கத்துக்கு, “தகுதியானவர்” என சான்றளிக்கிறோமா ? அது தவறு ! தகுதியற்ற நமக்குத் தரப்படுவது தான் இறைவனின் இரக்கமும், கிருபையும். எனவே எனக்குத் தகுதி இருக்கிறது, அடுத்தவருக்குத் தகுதி இருக்கிறது என நாம் இயேசுவிடம் சொல்லாதிருப்போம். தகுதியற்ற எமக்கு இரக்கம் தாரும் என இறைஞ்சுவோம்.

4. நூற்றுவர் தலைவரைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து சொன்னது இயேசுவை வசீகரித்திருக்க நியாயமில்லை. ஆனாலும் ஊழியனுக்காக தலைவர் கொண்ட‌ மனதுருக்கம் அவரை வசீகரித்திருக்க வேண்டும். அவர் அவர்களோடு சென்றார்.

நாம் இயேசுவிடம் வேண்டுகின்ற முறை தவறாக இருந்தால் கூட, மனம் சரியாக இருந்தால் இயேசு மனமிரங்குகிறார். இப்படித் தான் கேட்கவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு கேட்கவேண்டும் என விரும்புகிறார்.

5. அந்த நூற்றுவர் தலைவனோ, தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அவன் தனது ஈகையையோ, தொழுகைக் கூடம் கட்டியதையோ, அன்பாய் நடந்து கொள்வதையோ, தனக்கு தகுதி உண்டு என்பதையோ அவன் முன்னிலைப்படுத்தவேயில்லை. மாறாக இறைவன் முன்னால் தன்னைப் பற்றிச் சொல்லும் போது தகுதி என்பது அறவே இல்லாத மனிதராக தன்னை வெளிப்படுத்துகிறார்.

தான் தகுதியானவர் என நினைக்கும்போது ஒருவர் தகுதி இழக்கிறார்.
தனக்குத் தகுதி இல்லை என ஒருவர் நினைக்கும் போது தகுதி பெறுகிறார்.

தான் தாழ்மையானவன் என நினைக்கும் போது ஒருவனுக்குள் கர்வம் வருகிறது
தான் கர்வமானவனோ என கலங்கி இறைவனிடம் வருகையில் அவனுள் தாழ்மை எழுகிறது.

கிறிஸ்தவத்தின் வியப்பான கதை இது ! நாம் இறைவனிடம் வரும் போது உலக சாதனைகளின் பட்டியலோடு அல்ல, நமது பலவீனத்தின் யதார்த்தத்தோடு வருவோம்.

6. நூற்றுவர் தலைவன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதையும், அதிகாரத்தால் சாதிக்க முடிவதையும் அறிந்திருந்தான். அவனுக்குக் கீழே இருக்கும் படை வீரர்களைப் பார்த்து போ என்றால் போவார்கள், வா என்றால் வருவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவனால் ஊழியரின் நோயைக் குணமாக்க‌ முடியவில்லை. காரணம் அதற்கான அதிகாரம் அவனிடம் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் இயேசுவிடம் உண்டு என்பதை அவன் நம்பினான். இயேசுவின் ஒற்றை வார்த்தை போதும் என்பதை ஆழமாக விசுவசித்தான்.

7. இயேசு அவனுடைய விசுவாசத்தை வியந்தார். தான் போதிக்காத, புதுமைகள் செய்யாத பிற இன மனிதனின் விசுவாசம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. விவிலியத்தில் இரண்டு முறை தான் இயேசு “வியப்புற்றார்” எனும் வார்த்தை வருகிறது.

ஒன்று இஸ்ரயேயில் குறைவான விசுவாசத்தைக் காணும் போது வருகிறது. “அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் ( மார்கு 6:6 )”. இன்னொரு முறை இந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு அவர் வியப்புறுவதாய் வருகிறது. ஒன்று யூதமக்களின் விசுவாசமின்மை, இன்னொன்று பிற இனத்தவரின் ஆழமான விசுவாசம். இந்த முரணே வியக்க வைக்கிறது.

நாமும் இறைவன் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்கும் போது அவரது மனம் மகிழ்ச்சியினால் அசைக்கப்படும்.

8. “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என நூற்றுவர் தலைவர் சொன்னார். இயேசுவோ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த ஊழியரை சுகமாக்குகிறார். நாம் நினைப்பதற்கும் மேலாக இயேசுவின் வல்லமையும், ஆற்றலும் உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகிறது.

நாம் இயேசுவிடம் வரும்போது நமது தேவையைச் சொல்வதே சரியான வழி. அதை இறைவன் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயேசு அந்த ஊழியரை சந்தித்ததில்லை, என்ன நோய் என்பதைப் பார்த்ததில்லை, எத்தனை நாள் நோய் என ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் மனதில் நினைத்த போதே அந்த நோய் அலறி ஓடி விட்டது. மரண தருவாயில் இருந்தவரை வாழ்வின் வரவேற்பறைக்கு அழைத்து வந்தது. இறைவனின் ஆற்றல் கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும் நம்பிக்கை மனதில் இருக்கட்டும்.

9. இயேசுவை தேடிச் செல்ல நமக்குத் தகுதி இல்லை என நினைப்பதும், இயேசு நம்மைத் தேடி வரும் போது தகுதியற்றவர் நாம் என நினைப்பதும் தாழ்மையின் அடையாளமாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியதே. இயேசு பாவிகளையும் நேசித்தவர். அவரை நோக்கி ஓடி வர நமது பாவங்களே காரணமாய் இருக்கலாம், ஏனெனில் அந்தப் பாவங்களிலிருந்து தாம் நமக்கு மீட்பு தேவைப்படுகிறது.

இயேசுவைத் தேடிச் செல்பவர்களாகவும், இயேசு நம்மைத் தேடி வரும்போது எதிர்கொண்டு சென்று வரவேற்பவர்களாகவும் இருப்பதே சரியான வழியாகும்.

10. தான் யாருக்காக இந்த பூமிக்கு வந்தாரோ அந்த மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிற இன மக்கள் அவரை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறுபெற்றவன்” எனும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவைக் காணாமலேயே அவரை நம்பி பெரும் பேறு பெற்றான்.

அவனது விசுவாசம் அவனை மீட்புக்குள் வழிநடத்தியதா என்பதை விவிலியம் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவனது விசுவாசம் உடல்நலத்தை மட்டுமே சார்ந்திருந்தால், அது முழுமையற்ற விசுவாசம். நமது விசுவாசம் நம்மை மீட்புக்குள் வழிநடத்த வேண்டும். வெறும் உலக செல்வங்களுக்காக மட்டும் கொள்கின்ற விசுவாசம் நம்மை நிலைவாழ்வுக்குள் கொண்டு செல்லாது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Thursday, August 23, 2018

இயேசுவுக்கு சான்றுகள்



மனிதரின் தேடல்:

இந்த உலகத்தின் புதிய குழந்தையாக மனிதன் தோன்றியபோது, இயற்கையின் புதிர்களுக்கு விடை காண ஆவல் கொண்டான். இயற்கையில் செயலாற்றும் மேலான ஓர் ஆற்றலைப் பற்றி அதிகமாக அறிய ஆசைப்பட்டான். பல்வேறு வகைகளிலும், பலவித உருவங்களிலும் அந்த ஆற்றலுக்கு வழிபாடு செய்தான். ஆனாலும் நிறைவு பெறாத மனிதன், இயற்கைக்கு மேற்பட்ட அந்த ஆற்றலை நேரில் காண ஆவல் கொண்டான். இயற்கையை படைத்த அந்த கடவுள், ஒரு மனிதராகப் பிறக்க வேண்டுமென மனித மனம் ஏங்கியது; அமைதியில்லாத இந்த உலகில் அமைதியைக் கொண்டு வரும் போதனை களை வழங்கி மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமெனத் தவித்தது; மக்களின் பாவங் களுக்கு பரிகாரமாக கடவுளே தன்னைப் பலியாக்க வேண்டுமென விரும்பியது.
"வாடுகின்ற பயிர் மழைக்காக காத்திருப்பதுபோல, மக்கள் அனைவரும் உன்னதரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்." - 'தேடுதல்' என்ற சீன நூல்.
"கடவுளே தனது பெயரால் போதிக்க ஒருவரை அனுப்பாவிடில், மக்களை நல்ல ஒழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது." - தத்துவ ஞானி பிளேட்டோ.
"கடவுளே தோன்றி, உன் பாவங்களால் உண்டான தீமைகளை தன்மேல் ஏற்றுக் கொள்ளும்வரை இந்த சாபத்திற்கு முடிவிருக்கும் என எதிபார்க்காதே." - 'எஸ்கிலஸ்' என்ற கிரேக்க புராணம்.


கடவுளின் திட்டம்:

உண்மையில் கடவுள் தம்மைத் தேடி, அறிந்து, அன்பு செய்யவும், அதன் வழியாக அவரை அடையவுமே மனிதர்களை உருவாக்கினார். உலக வரலாற்றில் தம்மை வெளிப்படுத்துவது கடவுளின் முன்குறிக்கப்பட்ட திட்டமாக இருந்தது. கடவுள், தம்மை ஆபிரகாமுக்கு உருவம் இல்லாத நிலையில் வெளிப்படுத்தி இஸ்ரயேலரை தமது சொந்த மக்களினமாக தேர்ந்துகொண்டார். அவர்கள் வழியாகவே தமது மீட்புத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். இறைமகன் இயேசுவின் வருகைக்காக அவர்களைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் கடவுள் மனிதராக பிறக்க இருந்ததை மக்களுக்கு முன்னறிவித்தனர்.
"ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற் றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' [கடவுள் நம்மோடு] என்று பெயரிடுவார்." - எசாயா 7:14.
"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோ சகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப் படும்." - எசாயா 9:6.
"நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்." - திருப்பாடல்கள் 32:8.
"அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக் காகப் பரிந்து பேசினார்." - எசாயா 53:12.


உலகத்தில் இறைமகன்:

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதைய ரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ண கத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." - எபிரேயர் 1:1-3.
'பேதுரு கூறியது: "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமை யைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத் திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார் கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாக கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." - திருத்தூதர் பணிகள் 10:38-42.
"நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண் டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்கு கிறது." - 1 யோவான் 4:9-10.


வரலாற்று ஆவணங்கள்:

"இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரை சிலுவையில் அறைந்து கொள்ளுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவரது சீடர்கள் அறிவித்தார்கள். அதன்படி, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்." - யூத வரலாற்று ஆசிரியர் ப்ளாவியஸ் ஜோசப்பஸ் (கி.பி.37-97).
"இயேசு கிறிஸ்து இறைமகனாக விளங்கினார். நேர்த்தியானவை அனைத்தும் அவரில் நிறைவுபெற வேண்டியிருந்தது. பிலாத்துவின் அதிகாரத்தில், அவர் நமக்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு உண்மையாகவே இறந்தார். இறந்த அவரை தந்தையாகிய கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அதன் பின்பும் இயேசு தனது திருத்தூதர்களோடு இணைந்து உண்டு குடித்தார்." - அந்தியோக் ஆயர் புனித இக்னேசியஸ் (கி.பி.110).
"எனக்கு மனிதர்களை நன்றாக தெரியும். இயேசு கிறிஸ்து மனிதர்கள் அனைவரை யும்விட மேலானவர். அவர் தனது மரணத்திலேயே தன் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் இப்படிதான் செய்வானா? அவரது ஞானமுள்ள போதனைகள், அவருடைய ஆன்மீக அரசாட்சி, மற்றும் அவரின் மகிமை ஆகியவை எனக்கு மறைபொருளாகவே இருக்கின்றன. எனவே, இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன்." - மாவீரன் நெப்போலியன் (கி.பி. 1769-1821)

கிறிஸ்தவ விசுவாசம்


கிறிஸ்தவ விசுவாசம்


மூவொரு இறைவன்:
இறைவன் தமது இறைத்தன்மையில் ஒருவ ராய் இருக்கிறார். இந்த ஒரே இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களாய் விளங்குகிறார். இறைவனின் இந்த இயல்பு அதி புனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் அனைத்தையும் படைத்தவர் இவரே. இந்த ஒரே இறைவன் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்ல தன்மையிலும், எல்லையற்ற ஞானத்தி லும், பராமரிப்பிலும், சித்தத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். மோசேக்கு தம் மையே வெளிப்படுத்தியது போல், இவர் இருக் கிறவராய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போன்று, இவர் அன்பாய் இருக்கிறார்.
இந்த ஒரே இறைவன் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறி வுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். தந்தை, மகன், தூய ஆவியார் என்று தம்மையே வெளிப்படுத்தும் இறைவன் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த இறைவனின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது. மனித முறையில் நாம் சிந்திக்கக்கூடிய எல்லாவற்றிற்கும் இது அப்பாற்பட்டது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பின் நித்திய ஒளியிலும், இவருடைய நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைக்கப்பட் டுள்ளோம்.
மகனை நித்தியத்திற்கும் பிறப்பிக்கும் தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறோம். நித்தியத்திற்கும் பிறப்பிக்கப்படும் இறைவனின் வார்த்தையான மகனாகிய இறைவனை விசுவசிக்கிறோம். தந்தையிடம் இருந்தும், மகனிடம் இருந்தம் அவர்களுடைய நித்திய அன்பாக புறப்படும், தூய ஆவியாராகிய இறைவனை விசுவசிக்கிறோம். இவ்வாறு உட னொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று தெய்வீக ஆட்களில், முற்றும் ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்கு கின்றது. இவ்வாறே, படைக்கப்படாத பொருளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது.


இயேசு கிறிஸ்து: 



இயேசு கிறிஸ்து இறைமகனும் நம் ஆண் டவருமாக இருக்கிறார். காலங்கள் தொடங் கும் முன்பே, தந்தை இறைவனிடம் இருந்து பிறந்த நித்திய வாக்கு இவரே. இவர் தந்தை யோடு ஒரே பொருளானவர். இவர் வழியா கவே அனைத்தும் படைக்கப்பட்டன. இவர் தூய ஆவியாரின் வல்லமையால், கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். இவர் இறைத்தன்மையில் தந்தைக்கு சம மானவர், மனிதத்தன்மையில் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். இவர் அருளும் வாய்மையும் நிறைந்தவராய் நம்மிடையே விளங்கினார். இவர் இறையரசை அறிவித்து, அதை மக்க ளிடையே உருவாக்கினார். இவர் நம்மீது அன்பு செலுத்தியது போன்று, நாமும் ஒரு வர் மீது ஒருவர் அன்பு செலுத்துமாறு புதிய கட்டளையைத் தந்தார்.
இயேசு கிறிஸ்து, மன எளிமை, சாந்தம், பொறுமையுடன் சகித்தல், நீதியின்பால் தாகம், இரக்கம், இதயத் தூய்மை, சமாதான விருப்பம், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய வழிகளைக் கற்பித்தார். கடவுளின் செம்மறியான இவர், உலகின் பாவங்களை தம்மீது சுமந்து போன்சியுஸ் பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் தம் மையே பரிகார பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டார். அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்து எழுந்தார். தமது உயிர்ப்பால் நம்மையும் உயிர்ப்பித்து, தமது அருள் வாழ்வில் நமக்கும் பங்கு தந்தார். நாற்பதாம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாகிய இறைவனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முடியும் காலத்தில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.



தூய ஆவியார்:

தூய ஆவியார், ஆண்டவரும் உயிர் அளிப் பவருமாக இருக்கிறார். தந்தையாம் இறை வனோடும், மகனாம் இறைவனோடும் இவர் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறு கின்றார். முற்காலங்களில் இறைவாக்கினர் வழியாக பேசியவர் இவரே. இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகுக்கு அனுப்பி வைத் தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, திருச்சபை தோன்றி வளரச் செய்தார். திருச் சபைக்கு தொடர்ந்து ஒளியும் உயிரும் தந்து, இதைப் பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழு மாறு, இவரது செயல் திருச்சபையின் உறுப் பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல் கிறது. தம் அருளைப் புறக்கணியாமல் வாழ் பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார்.

கத்தோலிக்க திருச்சபை:

 

இயேசு கிறிஸ்து, பேதுரு என்னும் பாறை மீது தமது ஒரே திருச்சபையை நிறுவினார். இந்த திருச்சபை ஒருமை, புனிதம், கத்தோ லிக்கம் (பொதுமை), திருத்தூதுத்துவம் ஆகிய இயல்புகளை கொண்டுள்ளது. திருச்சபை கிறிஸ்துவின் மறை உடல். இது பலநிலை கொண்ட, அதிகார அமைப்பும் ஆன்மீக சமூக முமாய் இருக்கின்றது. இவ்வுலக திருச்சபை, பயண நிலையில் உள்ள இறை மக்களின் கூட்டமும், விண்ணக வரங்களால் நிரப்பப் பெற்ற சபையுமாய் இருக்கிறது. மீட்புப்பணி, திருச்சபையின் வழியாக மனித வரலாற்றில் தொடர்ந்து நிலைபெறுகிறது. திருச்சபை தன் உறுப்பினர்களை கிறிஸ்து இயேசுவின் மர ணம், உயிர்ப்பு ஆகிய மறைபொருட்களிலும், தனக்கு உயிரளித்து நடத்தி வரும் தூய ஆவி யாரின் அருளிலும் பங்குபெறச் செய்கிறது.
திருச்சபை இஸ்ரயேல் வழியாக இறைவ னின் வாக்குறுதிகளுக்கு வாரிசாகவும், ஆபிர காமின் ஞான மகளாகவும் விளங்குகிறது. இஸ்ரயேலரின் புனித நூல்களை திருச்சபை அன்புடன் பாதுகாத்து, அதன் முதுபெரும் தந்தையரையும் இறைவாக்கினரையும் போற்றி வணங்குகிறது. திருச்சபை திருத்தூதர்களின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை பாதுகாத்து வழிவழியாகக் கையளித்து வருவதோடு, அவர்களின் ஆயர்களுக்கு உரிய அதிகாரங்களை பேதுருவின் வாரிசான திருத்தந்தையிடமும், அவரோடு ஒருமைப்பாடு கொண்ட ஆயர் களிடமும் ஒப்படைத்து வருகின்றது. கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக தெளிவற்ற வகையில் வெளிப்படுத்தி, பிறகு கிறிஸ்து இயேசு வழியாக முற்றும் தெளிவுற அறிவித்த உண்மையைப் பாதுகாத்து, போதித்து, விளக்கிப் பரப்புவது திருச்சபையின் பொறுப்பாகும். இந்த பணியில் தூய ஆவியார், திருச்சபைக்கு தொடர்ந்து துணை புரிகிறார்.
கத்தோலிக்க திருச்சபை, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அகில உலக திருச்சபை மீதும், திருத்தந்தைக்கு அதிகாரம் உள்ளது. திருச்சபை அருள் அடையாளங்கள் வழியாக, தனது உறுப்பினர்களை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் புனிதத்தில் வழி நடத்துகிறது. எழுத்து உருவமாக அமைந்த, அல்லது மரபு வழியாக கையளிக்கப்பட்ட இறைவனின் வார்த்தையில் அடங்கியுள்ள அனைத்தையும் திருச்சபை ஏற்றுக் கொள்கி றது. மேலும், இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட மறை உண்மைகளை, காலச் சூழ்நிலை களுக்கு ஏற்ப திருச்சபை விளக்கிக் கூறுகிறது. பேதுருவின் வாரிசு என்ற முறையிலும், இறை மக்கள் அனைவரின் ஆசிரியர் என்ற வகையிலும், அதிகாரப்பூர்வமாக போதிக்கும் வேளையில், திருத்தந்தை தவறா வரம் உடையவராக விளங்குகிறார். அவரோடு ஒன் றித்து செயல்படும் ஆயர்களுக்கும் இந்த வரம் உண்டு. திருப்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஆயர்களின் பணியில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

திருவழிபாடு:


திருச்சபை அனைத்திற்கும் மேலாக இறைவனை நேசித்து, அவருக்கு ஆரா தனை செலுத்தி வருகிறது. நமது பாவ மன்னிப்புக்காக, கிறிஸ்து இயேசு கல் வாரி மலையில் செலுத்திய பலியை நாள்தோறும் புதுபித்து இறைவனுக்கு நன்றி கூறுகிறது. எல்லாம் வல்ல இறைவனின் அதிமிக மகிமைக்காக வும், மக்களின் பாவங்களுக்கு பரிகார மாகவும் இப்பலியைப் புதுப்பித்து ஆரா தனை செலுத்துகிறது.
திருச்சபை கிறிஸ்து வின் வாழ்வை மையமாக கொண்டு, திருவழிபாட்டு ஆண்டையும் ஒழுங்கு முறைகளை யும் அமைத்துள்ளது. இயேசு கிறிஸ்து வின் வருகைக்கு தயார் செய்ய திரு வருகை காலத்தையும், அவரது பிறப் பைக் கொண்டாட கிறிஸ்து பிறப்பு விழாக் காலத்தையும், கிறிஸ்துவின் பணி வாழ்வை சிந்திக்க பொதுக் காலத்தையும், இயேசுவின் திருப்பாடுகளை எண்ணி தவ முயற்சிகளை மேற்கொள்ள தவக் காலத்தையும், அவரது உயிர்ப்பைக் கொண்டாட பாஸ்கா காலத்தையும் திருச்சபை அமைத்துத் தந்துள்ளது. திருப்பலி, நற்கருணை வழி பாடு ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகள் இறைவனின் உறவில் வளர உதவுகின்றன.



அருள் அடையாளங்கள்:
திருமுழுக்கு:

 
பிறப்பு வழிப் பாவத்தையும் செயல் வழிப் பாவத்தையும் போக்கி, நம்மை கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகள் ஆக்குகிறது. 

உறுதிபூசுதல்:

திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களை, உண்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்த தூய ஆவியாரையும் அவரது வரங்களையும் வழங்குகிறது. 

நற்கருணை: 

கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் நமது ஆன்ம உணவாகிறது. 

ஒப்புரவு: 

திருமுழுக்கு பெற்ற பிறகு செய்யும் பாவங்களைப் போக்க உதவுகிறது. 

நோயில்பூசுதல்:

கடின நோயால் வேதனை அடைபவர்கள், பாவ மன்னிப்பு வழியாக ஆன்ம, உடல் சுகங்களை பெற உதவுகிறது.

குருத்துவம்:

திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், அருள் அடையாளங்களை நிறைவேற்றவும் திருப்பணி அதிகாரங்களை வழங்குகிறது.
திருமணம்:
இல்லற வாழ்வைத் தொடங்குபவர்களுக்கு, இறைவனின் ஆசீரையும் அருளை யும் வழங்குகிறது.



புனிதர்களின் உறவு:

கத்தோலிக்க திருச்சபை, மூன்று வித மான புனிதர்களை அடையாளம் காட்டு கிறது. விண்ணகத்தில் வாழும் புனிதர் கள், உத்தரிப்பிடத்தில் தூய்மை பெறும் ஆன்மாக்கள் மற்றும் மண்ணுலகில் வாழ்பவர்கள். இவர்களிடையே நிலவும் உறவே, புனிதர்களின் சமூக உறவு என்று அழைக்கப்படுகிறது. உலகில் வாழ்கிற வர்கள், புனிதர்கள் மற்றும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியைப் பெறுகின்ற னர். உத்தரிக்கும் ஆன்மாக்கள், புனிதர் கள் மற்றும் மண்ணுலகில் வாழ்வோரின் உதவியைப் பெறுகின்றனர். விண்ணக புனிதர்கள், மண்ணுலகில் வாழ்வோருக் கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கும் உதவி செய்கின்றனர். எனவே புனிதர்க ளிடம் வேண்டுதல் செய்வதும், அவர்க ளுக்கு வணக்கம் செலுத்துவதும் இறை வனின் உதவியைப் பெற தகுந்த வழிகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபை, இறைவனின் தாயான கன்னி மரியாவுக்கு மேலான வணக்கமும், மற்ற புனிதர்களுக்கு வணக்கமும் செலுத்துகிறது.

பாவ மன்னிப்பு:

 
கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையி லும் செய்யப்படும் செயல்களே பாவம் ஆகும். பாவம் இரண்டு வகைப்படும். அவை,
பிறப்பு வழிப் பாவம்: நமது ஆதிப் பெற்றோ ரிடம் உருவாகி, மனிதர் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து வரும் (கடவுளின் விருப்பத்துக்கு எதிராக செயல்படத் தூண்டும்) பாவ இயல்பே பிறப்பு வழிப் பாவம் எனப்படுகிறது.
செயல் வழிப் பாவம்: நாம் வாழும் காலத் தில், நமது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களால் செய்யப்படுவது செயல் வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.
பிறப்பு வழிப் பாவம் திருமுழுக்கின் வழி யாக போக்கப்படுகிறது. எவ்வாறெனில் திரு முழுக்கின் வழியாக நாம் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவதால் கடவுளின் விருப் பத்தை நிறைவேற்றும் அருளைப் பெறுகி றோம். செயல் வழிப் பாவம் ஒப்புரவு அருள் அடையாளம் வழியாக போக்கப்படுகிறது. நாம் செய்த பாவங்களுக்காக முழுமையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் மட்டுமே, கடவுளின் மன்னிப்பை முழுமையாக பெற முடியும். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக, சிலுவையில் அனுபவித்த பாடுகளின் பேறுபலன்கள் வழியாக நாம் இதில் மன்னிப்பு பெறுகிறோம்.


நிலை வாழ்வு:

நிலையற்ற இவ்வுலக வாழ்வு முடிந்த பிறகு, நாம் நிலையான மறுவுலக வாழ்வுக்குள் நுழைகிறோம். அதில் நமக்கு கிடைக்க வேண்டிய இன்பமும் துன் பமும் நமது இவ்வுலக வாழ்வின் அடிப்படையில் இறைவன் வழங்கும் தீர்ப்புகள் மூலம் முடிவு செய் யப்படுகிறது.
தனித் தீர்ப்பு: மரணத்துக்கு பிறகு தனித் தீர்ப்பு நடக்கிறது. நாம் இவ்வுலகில் செய்த பாவம், புண் ணியம், பரிகாரம் போன்ற செயல்களுக்கு ஏற்ப நர கம், மோட்சம், உத்தரிப்பிடம் போன்றவற்றில் ஏதே னும் ஒரு இடத்துக்கு செல்லுமாறு இயேசு நமது ஆன்மாவுக்கு தீர்ப்பு வழங்குவார்.
பொதுத் தீர்ப்பு: உலகம் முடியும் காலத்தில் வாழ் வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து அரசராக வருவார். இறந்தோர் அனைவ ரும் உடலோடு உயிர்த்து எழுவர். நல்லோரின் பேறு பலன்களுக்கு பரிசாக அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்ப வாழ்வுக்கும், தீயோரின் தீச்செயல்களுக்கு விலையாக முடிவில்லாத தண்டனைக்கும் கைய ளிப்பார். உடலோடும் ஆன்மாவோடும் நல்லோர் மோட்சத்திற்கும், தீயோர் நரகத்திற்கும் செல்வர். அதன்பின் இறைவனின் ஆட்சியில் புதிய வானகமும், வையகமும் தோன்றும்.


கிறிஸ்தவ வாழ்வு:

"என்னைப் பின்பற்ற விரும்புபவன், தன் சிலுவை யைத் தன் தோள் மேல் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும்", என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. கிறிஸ்து சாவில் இருந்து உயிர்ப்பு வாழ்வுக்கு கடந்து சென்றது போல, பாவ வாழ்வில் இருந்து புனித வாழ்வுக்கு கடந்து செல்வதே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் விடுக்கப் படும் அழைப்பு ஆகும்.
"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறு மையாக்கி அடிமையின் வடிவை ஏற்று, சாவையே ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற் கும் அளவுக்கு தம்மையேத் தாழ்த்திக் கொண்டார்." இறைவன் நமக்காக மனிதரானார், நமது பாவங்க ளுக்காக கொலையுண்டார் என்பதை நினைத்து, அவ ரது அன்புக்கு நன்றி செலுத்துவதும், அவருக்கு ஏற்ற வகையில் புனிதமான வாழ்வு வாழ்வதும் கிறிஸ்த வர்களின் கடமையாகும். கிறிஸ்து இயேசுவும் தமது திருச்சபை வழியாகவும், அற்புதங்கள் வழியாகவும் நம்மை ஆசிர்வத்து வழிநடத்துவார்.

Wednesday, August 22, 2018

கூட்டுச் செபமாலை.




1. பலன் கொடுக்கும் நவநாள் : 

செபமாலை நவநாளைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறது . அதிலும் கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் நவநாள் என்று ஒன்றைச் சொல்லுவார்கள் . இந்த நவநாள் போம்பேயி மாதா ஆலயத்தில் உதித்தது . 50 மணிச் செபமாலை தொடர்ந்து 54 நாட்கள் சொல்லுவதாம் . சந்தோஷ , துக்க , மகிமை மற்றும் ஒளியின் தேவ இரகசியங்கள் மாற்றிச் சொல்ல வேண்டும் . 27 நாட்களுக்கு கிருபையைப் பெறுவதற்காகவும் 27 நாட்களுக்கு அடைந்த கிருபைக்கு நன்றி செலுத்துவதற்காகவும் செபமாலை சொல்ல வேண்டும் . இதன் வல்லமையின் இரகசியம் விடாமல் செபம் செய்வதாம் .. எண்ணிக்கையில் அல்ல!

2. உயிருள்ள செபமாலை : 

150 மணி செபமாலையை ஒரு நாளில் சில கருத்துக்களுக்காகச் சொல்லி முடிக்க 15 பேர் கூட்டு சேர்கிறார்கள் . ஒருவரே 153 மணி செபமாலையை நாள்தோறும் சொல்ல அவகாசம் இல்லாமல் இருக்கலாம் . அல்லது 15 பேருடைய பக்தியினாலே கேட்பதை அடையலாம் என நம்பிக்கை இருக்கலாம் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பத்துமணி செபம் சொல்ல உடன்பாடு செய்து கொள்ளுகிறார்கள் . ஆளுக்கொரு தேவ இரகசியம் . குருஸ் மங்கள வார்த்தை சொன்னது ; சவரி எலிசபெத்தம்மாளை வினவினது ; பால் கர்த்தர் பிறந்தது எனலாம் . இப்பொதுக் கருத்துக்காக பத்து மணி சொன்னால் வேறு சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல . சங்கேதப்படி ஒரு பத்து சொன்னபின் , அவகாசம் இருந்தால் தனிப்பட்ட முறையில் 50 மணிச் செபமாலையோ அதற்க்கு மேலோ சொல்லலாம்.

உலக வாசிகளோ , குருக்களோ , துறவிகளோ இக்கூட்டை ஏற்படுத்தலாம் . பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , விடுதிகள் பாசறைகள் என எங்கு வேண்டுமானாலும் இக்கூட்டை அமைக்கலாம் . அமெரிக்காவில் ஒரு பங்கில் 75 ஆண்டுகளாக 2000 பேருக்கு மேல் இக்கூட்டு செபமாலையைச் செய்து வருகின்றனர் .

3. குடும்பச் செபமாலை 

குடும்பத்தில் சமாதானத்தையும் பரிசுத்தத் தனத்தையும் காப்பாற்றுவதற்கு குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கம் போற்றற்குரியது . அச்சமயத்தில் கிறிஸ்துவே குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கிறார் என்று சொல்லலாம் . தனிப்படச் சொல்லுவதை விட இக்கூட்டு செபத்துக்கு எவ்வளவோ பலன்கள். " என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்திருப்பார்களேயாகில் நான் அங்குள்ளேன்" என்று ஆண்டவர் சொல்லவில்லையா ? தாயும் தந்தையும் மக்களும் யாவரும் ஒன்றித்து வர வேண்டும் . அதற்க்க்காகச் சரியான நேரத்தைக் குறிக்க வேண்டும் . குழந்தைகள் தூங்கிப் போகும் சமயம் பின்னிரவில் வைத்தலாகாது . அலுவலகத்திற்குச் சென்றோர் திரும்பும் முன் வைத்தலாகாது . சில கடற்கரைகளிலோ, ஆலைகளிலோ வேலை செய்வோர் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டுப் போவதால் ஆறு மணிக்கு முன் வைக்கலாம் .அப்பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி விடுவர் . அல்லது பகல் உணவு உண்டு வேலைக்குப் போகும் முன் செபிக்கலாம் . பொதுவில் இரவு உணவுக்கு முன் கூடி செபிப்பது சிறந்த நேரம் எனலாம்

புதிதாய் மணம் செய்த இளம் தம்பதிகள் , மணமானவுடனே இப்பழக்கத்தைத் துவங்க வேண்டும் . தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் பலர் செபமாலைக்கு வர முடியாவிட்டாலும் இரண்டு பேராவது சேர்ந்து குடும்பத்தின் பேரால் அன்று செபமாலை சொல்ல வேண்டும் . விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று செபமாலை சொல்லாமல் விட்டு விடக் கூடாது . விருந்தாளிகள் எம்மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் குடும்ப செபமாலை நடத்த வேண்டும் . வந்தவர்கள் குடும்பத்தைக் கண்ணியப்படுத்துவார்கள் . குடும்ப செபமாலை விசேசமாய்த் தற்காலத்தில் குடும்பத்தைக் காக்க செபமாலை அன்னை உருவாக்கிய கோட்டை . செபமாலை இராக்கினி ஆட்களையும் , குடும்பங்களையும் தேசங்களையும் சாதி சனங்களையும் ஏன் உலகையே காப்பாற்றி வருகிறார் . உலக சரிதை இதைச் சாற்றுகிறது

இங்கும் பற்பல இடங்களில் இதைக் கண்டோம் . இன்றைக்கோ குடும்பங்களைத்தான் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது . குடும்பத்தை அழித்து அதன் வழியாகச் சமுதாயத்தையும் நாடுகளையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது நரகம் . குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் . குடும்பம் காப்பாற்றப்பட்டால் உலகையே காப்பாற்றுவோம் .குடும்பத்திற்கு தன்னிலேயே ஒரு செல்வாக்கு உண்டு . குடும்பங்களின் சேர்க்கை தானே ஊரும் நாடும் ? அன்பினால் ஒன்றித்திருக்கும் குடும்பம் செபமாலையைச் செய்து வருமே யாகில் அதன் செல்வாக்கு இன்னும் அதிகரித்து , உலகைக் காப்பாற்றும் . குடும்பச் செபமாலை தாயின் மன்றாட்டினால் ஆண்டவரது உள்ளத்தையே கரைக்கிறது எனலாம்

உலக சிந்தை ,உலகப் பற்று , உலக நோக்கம் என்னாளுமே குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நஞ்சு. இக்காலத்தில் புதிய ஆபத்துக்கள் குடும்பத்தின் அன்பையும், ஒற்றுமையையும் சுகத்தையும் அழித்து சாக்கடையில் தள்ளிப் புதைக்கத் தேடுகின்றன . குடும்பக் கட்டுப்பாடு , மதச் சார்பற்ற சீர்திருத்த திருமணம், தற்காலிக உடன்பாடு , விவாகரத்து , காணா சிசுக்கொலை (கருக்கலைப்பு) போன்றவை சில. சில காலத்திற்கு முன் ஆடை நன்றாய் அணியத் தெரியாத நாடோடிகள் முதலாய் பகிரங்கமாய் இதைப் பற்றிப் பேசக் கூசுவார்கள். தற்காலமோ நாட்டின் உயிரையும் மதிப்பையும் காப்பற்றப் போவதாகச் சொல்லி அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போரும் அதிகாரிகளும் நாட்டு மக்களின் பணத்தை ஓட்டைப் போலக் கருதி இந்த நரக போதனைகளைக் கற்றுக் கொடுக்க சாவடிகள் அமைத்தும் , இக்காணாக் கொலைக்கு வேண்டிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும் மலிவான விலைக்கு வழங்கப் போகிறார்களாம் . ஐயோ கேடு ! ஐயோ கேவலம் ! இந்த அக்கிரமங்களைப் பிரச்சாரப்படுத்த சுவரொட்டித் தாள்கள் என்ன ? ஏடுகள் என்ன , சினிமாக்கள் என்ன ? குடும்பங்களைக் குலைக்கவும் அழிக்கவும் தேடும் இந்நாட்களில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவர் செபமாலை இராக்கினியும் குடும்ப செபமாலையுமே.

எங்குக் குடும்ப செபமாலை மலர்கிறதோ அங்கே மேற்சொன்ன தீமைகளை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டு . நோய் வறுமை முதலியவைகளைச் சகிக்க சக்தியுண்டு . ஏனெனில் தந்தையும் தாயும் முழந்தாளில் இருந்து செபமாலை சொல்லுகிற போது நாம் இறைவனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் சத்தியத்தை மக்களுக்கு ஊட்டுகிறார்கள். "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே " என்று சொல்லும்போதே நாம் உலக மக்களைப் போல் மன்றாடுவதில்லை . நாம் தேவ மக்கள் ; அளவில்லாத அன்பும் வல்லமையும் உள்ள கடவுள் தாம் நம் தந்தை . தந்தைக்குரிய பட்சத்தோடு அவர் நம்மைப் பாதுகாத்து வருவார் , நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என பெற்றோரும் , பிள்ளைகளும் யாவரும் கற்றறிகிறோம்

"அருள் நிறைந்த மரியே " என்னும் மந்திரத்தை ஒரு பாதியை ஒருவரும் மறு பாதியை யாவரும் சொல்லுவதற்குப் பதில் யாவரும் முழுவதையும் சொல்லலாம் . அல்லது பாதிப் பேர் ஒரு பகுதியையும் சொல்லலாம் . தலைவர் தேவ இரகசியங்களை அறிவிக்கலாம் . அல்லது இறுதியில் கொடுத்திருக்கும் தியானத்தை அவர் வாசிக்கலாம் . அல்லது யாவரும் வாசிக்கலாம் .

குடும்பச் செபமாலை தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகவே வழக்கில் இருந்தது எனலாம் . மதுரை மாகாணத்திற்கு வந்த இத்தாலிய , பிரெஞ்சு மிஷினரி குருக்கள் இவ்வழக்கத்தை ஊன்றினர். பாப்புமார்கள் குடும்பச் செபமாலையைப் பெரிதும் போற்றி இருக்கின்றனர் . " உங்கள் உள்ளத்திலும் , தேசத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்று ஆசிப்பீர்களேயாகில் ஒவ்வொரு மாலையும் ஒன்று சேர்ந்து செபமாலை சொல்லுங்கள் .வத்திக்கான் அரண்மனை முழுவதிலுமே செபமாலையை போல வேறொரு பொக்கிஷம் இல்லை. பல பலன்கள் கொடுக்கப்பட்ட இந்த எளிய முறைச் செபமான செபமாலை ஒவ்வொரு குடும்பத்திலும் மாலைதோறும் பிரமாநிக்கமாய் சொல்லப்படுவதாக . இவைதான் நான் உங்களுக்குச் சொல்லும் கடைசி மொழிகள் .நான் விட்டுச் செல்லும் ஞாபகச் சின்னம் " என்றார் 9ம் பத்திநாதர்

செபமாலையை பற்றி நிருபத்துக்கு மேல் நிருபம் எழுதிப் போன 13ம் சிங்கராயர் "குடும்பத்தில் செபமாலை சொல்லாத நாள் இருத்தலாகாது . தனிப்பட்டோரின் பக்தியை வளர்க்கவும் , சமூகத் தேவையை பரிகரிக்கவும் அது ஏற்ற வழி . மாதாவின் செபமாலையைக் குடும்பங்களில் சொல்லி வரும் பழைய மகிமை தழைத்திருக்குமேயாகில் , தப்பறைகளினாலோ மனம் பொருத்த மூடத்தனமான அறியாமையினாலோ விசுவாசத்தை இழந்து போகும் நிர்பாகியம் ஏற்படாது " என்று வரைந்தார்

11ம் பத்திநாதர் பெற்றோர்களுக்குச் சொல்லுவார் : குடும்பத்தின் தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு எதிலும் நன்மாதிரியாகக் காட்ட வேண்டும் . எனினும் பிரியமாய் மாலை நேரத்தில் ஒன்றாய்க் கூடி முழந்தாள் படியிட்டு செபமாலை சொல்லுவதில் நன்மாதிரியாயிருக்க வேண்டும் . இது மகா லாபகரமான இன்பமயமான வழக்கம் . இதனால் குடும்பங்களுக்கு சமாதானமும் ஏராளமான மோட்ச கிருபைகளும் கிடைக்கும் "

மாமரியின் பாப்பாண்டவரும் , மாமரியைத் திருக்காட்சியில் கண்டவருமான நம் திருத்தந்தை 12 ம் பத்திநாதர் குடும்ப செபமாலையைப் பற்றி பற்பல முறை இடை இடையிலே கூறி இருந்தாலும் 1952ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப செபமாலையைப் பற்றி நீண்ட நிருபம் அனுப்பினார் . குடும்பங்களில் மகிழ்ச்சியையும் கடவுளுடைய பெரும் கொடைகளையும் அடைவதற்கு நிச்சயமான வழி வேறொன்றுமில்லை . குடும்பச் செபமாலை வழக்கில் இருக்கும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் , பிற்காலத்திலும் செபமாலைப் பக்தி உள்ளவர்களாய் ஒழுக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள் . பொது செபத்துக்குரிய ஆசீர்வாதங்களும் அக்குடும்பத்துக்கு வரும் என்றார்

4.ஆலயத்தில் பொதுச் செபமாலை 

பங்கிலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் செபமாலை சொல்லும் வழக்கத்தையும் போற்ற வேண்டும் .அதனால் பங்குக்குப் பெருத்த இலாபம்.

செபமாலையும் சம்மனசுக்களும்.



செபமாலை சொல்லும் வழக்கம் சிறிது பரவின காலை சம்மனசுக்களின் பக்தியும் பெரிதும் போற்றப்பட்டது என்று சொல்லலாம் . 12ம் நூற்றாண்டில் பற்பல தப்பறைகள் சம்மனசுக்க்ளைப் பற்றி நடமாடின . 1215 ஆம் ஆண்டில் 4ம் லூத்தரன் பொதுச்சங்கம் அழுத்தமாக தெளிவாய் மொழிந்தது என்னவெனில் , சம்மனசுக்கள் படைக்கப்பட்டவர்கள் . மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் சம்மனசுக்களைப் படைத்தார். வேதத்தில் சம்மனசுக்களுக்கு வழங்கும் பேரின் தமிழாக்கம் அஞ்சல் தூதர்கள் என்பதாம் .அவர்கள் சுத்த அரூபிகள் . உடலோடு - மனிதனைப் போல - இணைக்கப்படாதவர்கள் . இணைக்கப்படவும் உண்டாக்கப்பட்டவர்கள் அல்லர் அவர்கள் . அருமையான கானங்கள் இசைத்து ஆண்டவர் அருகில் அமர்ந்து அவரைத் துதித்து தோத்தரிக்கின்றனர். ஒரு நாளும் பாவத்தை அறியாதவர்கள் . ஆனதால் அவர்கள் கொழுந்து விட்டு எரியும் சிநேகத்தின் சோதிச் சுடர்கள் . கடவுளுடைய வேலைப்பாட்டின் மணிகள் , இறைவனுடைய ஆணைக்கு விரைந்து பணியத் தயாராய் இருக்கின்றனர்

கடவுள் அவர்களுக்குப் பிறகு மனுமக்களைப் படைத்தார் . மனிதர்களும் அவருடைய சட்டங்களுக்குப் பணிந்து ஈடேற்றத்தைச் சம்பாதிக்க வேண்டியவர்கள் . இச்சட்டம், இக்கதி , கடவுளின் இந்த இனிமையான நோக்கம் மனிதனுக்கு நன்றாய்த் தெரியும் . எனினும் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய சட்டத்தின் நாளிலும் இறைவனுடைய மதுரமான சித்தத்தை மனிதருக்கு அறிவிக்க கண்ணுக்குத் தோன்றும் விதம் சம்மனசுக்கள் தோன்றி இருக்கிறார்கள் . தோன்றுகிறார்கள் . ஈடேற்றத்தின் மக்களுக்கு உதவி செய்யும் ஆவிகள் என்று அவர்களைக் குறித்து சின்னப்பர் சொல்லிப் போனார் அல்லவா ? நமது ஈடேற்றத்தை நிறைவேற்றியவர் மனித அவதாரம் எடுத்த தேவ குமாரன் ஆனபடியால் அவருக்குப் பணிந்து நடக்கும் அவ்வலுவலில் அவர்களும் பங்கெடுப்பதில் அதிசயம் உண்டா ? ஆதலின் செபமாலையின் இரகசியங்களில் மறைந்தோ திறந்தோ சம்மனசுக்கள் தோன்றுவதைக் காண்கிறோம்

சம்மனசுக்களின் ஒன்பது விலாசம் , அவர்கள் எண்ணிக்கை அநந்தம். நம் கணக்குக்கு எட்டாதவை . கால பரிபூரணம் வந்த போது ஆதாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்கு நிறைவேறும் நாள் வந்தபோது அச்சுப செய்தியை அறிவிக்க கபிரியேல் என்னும் அதிதூதர் அனுப்பப்பட்டார்

கன்னிமரி செபத்தில் ஆழ்ந்திருந்தபோதோ , வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதோ அழகு வடியும் இந்த அஞ்சல் தூதர் மரிக்கு அதை அறிவிக்க அனுப்பப்பட்டார் . பிதாவாகிய கடவுளே உருவாக்கிய மேலான இதமான " அருள் நிறைந்த மரியே " என்ற வாசகத்தை முதன் முதல் உச்சரிக்கக் கபிரியேல் பாக்கியம் பெற்றார் . தம் புத்தி சாதுரியத்தினால் கன்னியின் சந்தேகங்களைத் தீர்த்து அவரது சம்மதத்தைப் பெற்று ஆவலோடு காத்திருந்த சம்மனசுக்களின் கூட்டத்திற்கு " வார்த்தையானவர் மனு உருவானார் " என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை அறிவித்தார் . நவவிலாச சம்மனசுக்களுக்கு பொங்கி வழிந்த மகிழ்ச்சியை எடுத்து மொழிய முடியுமா ?

அடுத்த ஒன்பது மாதங்கள் அவர்கள் எவ்விதம் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம் . கடைசியில் முதல் கிறிஸ்துமஸ் வந்தது . கூட்டம் கூட்டமாய் மாலை மாலையாய் விண்ணுலகை விட்டு வானதூதர்கள் மண்ணுலகுக்கு இறங்கினர் . " உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று இசைத்தனர் . மோட்சத்தில் தங்களுக்கு தோழர்களாக இருக்க வேண்டிய மானிடரையும் மறக்காமல் " பூலோகத்தில் நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம் உண்டாவதாக " என்று இச்சமாதான ஆவிகள் ஆர்ப்பரித்தனர் . தங்கள் இனத்தாரில் சிலர் அகங்காரத்தினால் மனுதாவதாரம் எடுக்கப்போகும் மனுமகனுக்குச் செய்த துரோகத்துக்கு இவ்விதம் இன்று முதல் முதலாகப் பரிகாரம் செய்யப் பாக்கியம் பெற்றனர் . கடவுளுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்குள்ள மகிழ்ச்சியால் மனிதர்களும் மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யக் காந்தம் போல அவர்களை இழுப்பர். தங்களுக்கு இன்றிருந்த ஆனந்தத்தால் எல்லாச் சந்தோஷ தேவ இரகசியங்களையும் நிரப்புவர் . மலங்காட்டில் மலடியான உறவினளை மாமரி பார்க்கச் சென்ற போது இஸ்ராயேலரின் வனாந்தரப் பிரயாணத்தில் ஒளி மேகம் அவர்கள் மேல் படர்ந்து சென்றது போல , சம்மனசுக்களின் பிரகாசத் திரள் படர்ந்து சென்றிருக்க வேண்டும் . இயேசுவைத் தூக்கி எருசலேம் ஆலயம் சென்ற பொது இம்மகிமைக் காப்பாளர் தாயையும் சேயையும் விட்டு தூரம் பிரிந்திருக்க முடியுமா ? இயேசு எருசலேமில் தங்கிய முத்தினமும் சம்மனசுக்கள் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஆவி பறக்கச் செய்திருப்பார்கள் என்று நம்பலாம் அல்லவா?

பூங்காவனத்தில் மனம் ஒடிந்து கசப்பான பாத்திரத்தைக் கண்டு தளர்ந்து ஆண்டவர் தவிக்கும்போது பயம், பாவம் , மரணம் என்பவைகளோடு ஆண்டவர் மல்யுத்தம் தொடுத்த போது தம்மைச் சூழ்ந்து நின்ற சம்மனசுக்களின் பிரசன்னம் அவர் உள்ளத்தில் ஆறுதலின் ரேகைகளை ஒட்டியிருக்க வேண்டும்

அவர் தெரிந்து கொண்ட மூவரையும் நித்திரை கவர்ந்து கொண்ட போது , மனிதர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போவார்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பாய்ந்த போது , சம்மனசுகள் தம்மை விட்டுப் போகார்கள் என்ற எண்ணமான தைலம் மனதில் சிறிது குளிர்ச்சியைப் பரப்பியது . கற்றூணில் ச்கசையடிகள் அலறியபோது அவர்கள் தங்கள் சிறகுகளை விரித்து அண்டையில் இருப்பார்கள் . ஜனத்திரள் இழி சொல்லையும் பழி வசனத்தையும் பொழிந்தபோது அவைகளை அமர்த்தியது போல மக்கள் செவிக்கு எட்டாவண்ணம் இவர்கள் பண் இசைப்பார்கள் . பிலாத்தின் அரண்மனை முற்றத்தில் " அவனைச் சிலுவையில் அறையும் அறையும் " என்று மானிடப் பதர்கள் இரைந்த போது , அந்த இரைச்சலுக்கு மேலே பதின்மடங்கு சத்தமாய் நாவற்ற குரலில் " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக " என்று ஞானாதிக்கர்களின் ஆதிக்கத்தில் இவர்கள் கோஷிப்பார்கள். ஏரோதன் அரண்மனை வாசலில் மரியாதையற்ற கேள்விகளையும் சொல்லையும் வழங்கியபோது , அதைவிட ஆயிரமடங்கு சத்தமாய்த் தொனியற்ற குரலில் " பரிசுத்தர் , பரிசுத்தர் , மகிமையும் , பெருமையும் , செல்வாக்கும் பெற நீர் தகுதியுள்ளவர் " என்று பண் இசைப்பர் . உடல் எல்லாம் கிழிந்து உடைந்த தூணில் உட்கார்ந்து கொண்டு , முள்முடி சூட்டி , ஈன சேவகர்களின் பரிகாசத்துக்கு ஆளான போது," அவரிடம் உள்ளது அரச இதயம் ; தெய்வீகத்தின் இரத்தம் அவரது நாளத்தில் ஓடுகிறது . முள்முடி சூடி இரத்தத்தால் தோய்ந்த அவரது சிரசு , தெய்வீக ஞானத்திற்கு இருப்பிடம் " என்று விழுந்து விழுந்து அவரை ஆராதித்தனர் . கல்வாரிக்குப் போகும்போது மெய்க்காப்பாளர்கள் போல அவரைச் சுற்றித் தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் , பூலோக ஆஸ்தியெல்லாம் சேர்த்து வாங்க முடியாத வைடூரியங்களைப் போல பாவித்து பதனமாய் பொறுக்கி எடுப்பர். வெளியரங்கமாய்த் தோன்றி இருந்தால் கசடர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் , கர்த்தனின் திட்டம் நிறைவேறாதென்று மறைந்தே சென்றனர். இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே சேனை சேனையாய் வானதூதர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்து ஆண்டவரை ஆராதித்தனர்

மகிமைத் தேவ இரகசியங்களில் என்றும் இல்லாத விதமாய் மக்கள் அருகில் இந்த மோட்ச மன்னர்களைப் பார்க்கிறோம். புத்தி பேதலித்த சில யூதர் இயேசுவின் கல்லறையைக் காவல் புரிய சில சேவகர்களை நிறுத்தினர் . வீண் வேலை . ஆயிரக்கணக்கான பரலோக இளவரசர்கள் திருச்சரீரத்தை பயபக்தியோடு காவல் காத்து நின்றனர் . மரிய மதலேனாளும் மற்ற பெண்களும் கல்லறையைக் காண வந்த காலை " உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள் " என்கிறார்கள் அத்தூதர்கள் . இயேசு மரித்ததாக அச்சம்மனசுக்கள் கருதவில்லை போலும் ."நீங்கள் இயேசுவைத் தேடுகிறீர்களா ?" அச்சம்மனசுக்களுக்கு இயேசுவைத் தேட அவசியமே இல்லை . அவர்கள் தாம் அல்லும் பகலும் கல்லறையைச் சூழ்ந்து நிற்கின்றனரே . உலக முடியுமட்டும் வானதூதர்கள் இயேசு மூன்று நாள் தங்கிய கல்லறையைக் காவல் புரிந்து நிற்பர். பெத்லேகேமின் நற்செய்தியை வானதூதர் உலகுக்கு அறிவித்தனர் . பூங்காவில் சம்மனசானவர் இயேசுவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் . கல்லறையில் அவர் வேலை முடிந்ததென்று வானதூதர் அறிவிக்கின்றனர் . " உயிர்த்தெழுந்து விட்டார் . அவர் இங்கில்லை . மரித்தோரிடமிருந்து எழுந்தவர் இனி ஒருநாளும் மரிக்க மாட்டார் "

நாற்பது நாள் இயேசு பூலோகத்தில் இருந்தபோது அவரது சிறிய ஆசையையும் நிறைவேற்றத் தேடுவது போல அவரைச் சூழ்ந்து சுற்றி சுற்றி வந்தனர் . அவர் பரலோகத்துக்கு ஆரோகணமானபோது மெய்க்காப்பாளர்கள் போல மகிமைப் பிரதாபத்தோடு இனிய குரலோடும் வீணை நாதத்தோடும் சங்கீதம் முழங்கிச் செல்லுகின்றனர் . அவர்களை நோக்கித்தான் " உங்கள் சிரசை உயர்த்துங்கள் "என்று தாவீது அரசர் பாடினாரா? இப்பூவுலகில் முதலாய் அரசனுடைய மரணத்திற்குப் பின் அவன் தாயை பிரஜைகள் புறக்கணித்து விடுகிறார்களா ? முப்பத்து மூன்று ஆண்டுகளோ அதற்க்கு மேலோ தாயோடு தங்கியிருந்த சம்மனசுக்கள் அவருக்குத் துணையும் மகிமையுமாய் நின்றனர் . அவர் மரணத்திலும் அகலவில்லை . அவர் தேவ மகன் வந்து அவரைத் தாங்கி பரலோகம் எடுத்துச் சென்ற போது வானதூதர்களின் மோன மகிழ்ச்சி என்ன ? நம் மானிட மொழியில் அவர்களது மகிழ்ச்சியை விளக்க வேண்டுமேயாகில் விதம் விதமாய்ப் பாடினர் , பிரிவு பிரிவாய்ச் சங்கீதம் இசைத்தனர் . வாத்தியங்கள் கோஷித்தன . மேளங்கள் முழங்கின . ஆடினர் . நர்த்தனம் புரிந்தனர் . என்ன மகிழ்ச்சி ! மகுடாபிஷேக நேரத்தில் அரசிக்கு விதவிதமாய்க் காணிக்கை கொண்டு வர , போட்டி போட்டது போல வந்தனர் . தங்கள் வணக்கத்தைச் சமர்ப்பித்தனர் . கை கொட்டினர் . "அகில உலக அரசி வாழ்க , பரலோக பூலோக அரசி வாழ்க வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர்.

செபமாலையும் அர்ச் சூசையப்பரும்.



பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?

பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம் - முக்கிய பாகம் - இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்

இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில் - தோட்டக்காரன் விதைக்காவிடினும் - அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்.

இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்

சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது

இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம் - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம் - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்

திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும் - பழைய ஏற்பாட்டு சூசையைப் போல - ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்

குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா ?

16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்

13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்

வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்.

செபமாலை உத்தமத்தனத்தின் பாதை.



புனிதர்கள் இயேசுவின் வாழ்க்கையைத் தியானிப்பதே தங்கள் கதி எனக் கருதினார்கள் . அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் பற்றி தியானித்தனர் . இவ்விதம் கிறிஸ்தவ உத்தமத்தனத்தின் உச்சியில் சேர்ந்தனர் .

அர்ச் பெர்நார்து இவ்வித தியானத்தை ஒரு முறை தொடங்கிய பின் கடைசி நாள் வரை அத்தகைய தியானத்தில் நிலைத்திருந்தார் . அவர் சொல்லுகிறார் :" நான் மனம் மாறிய துவக்கத்தில் இயேசுவின் துக்கத்தை ஓர் மலர் கொத்தாக கட்டி என் இதயத்தின் மேல் வைத்தேன் . பாடுகளின் நேரத்தில் அவரை வாதித்த அடியையும் , ஆணிகளையும் முட்களையும் பற்றி நினைத்தேன் . என் மனதின் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்து ஒவ்வொரு நாளும் இந்த இரகசியங்களைப் பற்றி தியானித்தேன் "

வேத சாட்சிகளின் வழக்கமும் இதுதான்; அதனால் பெரும் வாதனை வருத்தங்கள் மத்தியிலும் அவர்கள் அசையாமல் நின்று வெற்றி கண்டனர் . வேத சாட்சிகளின் அதிசயத்துக்குரிய உறுதியான நிலைக்குக் காரணம் இயேசுவின் காயங்களை ஓயாமல் சிந்தித்தது தான் என அர்ச் பெர்நார்து மொழிகிறார் .
தேவ தாய் தன் வாழ்க்கை முழுதும் செய்தது என்ன ? அவருடைய தேவ மகனின் புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார் . அவருடைய பிறப்பில் சம்மனசுக்கள் சந்தோசமாய்ப் பாடுவதைக் கேட்டதையும், இடையர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டதையும் , மனதில் இருத்தி இந்த அதிசயங்களைப் பற்றி தியானித்தார் . மாமிசமான வார்த்தையின் மகிமையை அவரது ஆழ்ந்த தாழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தார் . மாட்டுக் குடிலில் தூங்குபவரை அவருடைய மகிமை சிம்மாசனத்தில் மோட்சத்தில் பிதாவோடு அமர்ந்திருப்பதை தரிசித்தார் . கடவுளின் வல்லமையையும் குழந்தையின் பலவீனத்தையும் நிறுத்துப் பார்த்தார் .

ஒரு நாள் அர்ச் பிரிஜித்தம்மாளுக்கு நமதாண்டவள் சொல்லுவார் :" என் மகனின் அழகையும் அடக்கத்தையும் ஞானத்தையும் நான் தியானித்த போது என் உள்ளம் மகிழ்ச்சியால் கரை கடந்து பொங்கியது . கூர்மையான ஆணிகள் துளைக்கப்போகும் அவரது கரங்களையும் கால்களையும் கருதிய போது கண்ணீர் சொரிந்தது ; துக்கத்தாலும் வாதனையாலும் என் இதயம் பிளந்தது "

ஆண்டவரின் மோட்ச ஆரோகணத்திற்குப் பின் இயேசுவின் பாடுகளாலும் பிரசன்னத்தாலும் அர்ச்சிக்கப்பட்ட தலங்களை அடிக்கடி தரிசித்து வந்தார் . அத்தலங்களில் இருக்கும் போது அவரது அளவிறந்த அன்பையும் பயங்கரப் பாடுகளையும் பற்றி சிந்தித்தார்

முப்பதாண்டுகளாக மரிய மதலேனாள் இவ்வழக்கத்தை போமா என்ற ஊரில் தனிவாசத்தில் கையாண்டாள். திருச்சபையின் துவக்கத்தில் பரிசுத்த தலங்களைத் தரிசிக்கும் வழக்கம் சர்வ சாதாரணம் என்று அர்ச் ஜெரோம் சொல்லுகிறார் . கிறிஸ்தவர்கள் பற்பல நாடுகளில் இருந்தும் வந்து இந்த தலங்களைத் தரிசித்தனர் . இயேசு சபை ஸ்தாபகரான அர்ச் இஞ்ஞாசியார் எவ்வளவு இடைஞ்சல்களில் அவைகளைப் போய்த் தரிசித்தார் . குருக்களும் கன்னியர்களும் தான் விசுவாச சாத்தியங்களைப் பற்றியும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் தியானிக்க வேண்டும் என்பது பெரும் தவறு . தங்கள் நிலைக்கேற்ற பிரகாரம் வாழ்வதற்கு குருக்களும் , துறவிகளும் இச்சத்தியங்களைப் பற்றி தியானிப்பது அவசியம் எனில் , சோதனை நிறைந்த உலகில் சிக்கிய இல்லறத்தார்களும் தங்கள் ஆத்துமத்தை இழந்து போகாவண்ணம் இச்சத்தியங்களைத் தியானிப்பது மகா அவசியம் அல்லவா ? திருச் செபமாலை தேவ இரகசியங்களில் இச்சத்தியங்கள் யாவும் எவ்வளவு நேர்த்தியாய்ப் பொதிந்திருக்கின்றன ! தேவ இரகசியங்களை தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லுவோமாக

தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்.



கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம் ."பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா ? எவ்விதம் பின்பற்றுவது ? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில் ; "நானே வழி "என்றார் கிறிஸ்துநாதர் . அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார் . ஓவியன் படம் தீட்டும்போது, தன்yகண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும் . அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி , அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி

நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை . ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .

பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .

இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?

அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய் ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்

தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .

ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்!

தேவ தாயின் மோட்ச ஆரோபணம்.



தேவ நற்கருணையைத் தாங்கும் பாத்திரத்தை பொன்னால் செய்தோ , பொன்முலாம் பூசியோ , அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைத் தவிர வேறொன்றும் தொடா வண்ணம் எவ்வளவு பதனமாய் வைத்திருக்கிறோம் ? பத்துமாதம் இயேசுவைச் சுமந்த பாத்திரத்தை இயேசுவின் சதையின் சதையும் ரத்தத்தின் ரத்தமுமாகிய தேவ தாயின் உடலைக் கல்லறையின் அழிவு அண்டத் திருமகன் சம்மதிப்பாரா ? மரிக்கக் கடன் இல்லாவிட்டாலும் மகனைக் கண்டு பாவித்து மரித்த மாமரியைச் சில தினங்களுக்குள் நேச குமாரன் ஆடம்பரத்தோடு மோட்ச மாளிகைக்கு ஏந்திச் செல்லுகிறார் . சூரியர்களை விட அதிகப் பிரகாசம் வீசி சோதி முகில்களிடை மாதா மெதுவாய் மிதந்து செல்லுகிறார் . அவரைச் சுற்றி எத்தனை வானதூதர்களின் கணங்கள் ! அவர்கள் அசையும்போது அவர்களுடைய வெண் நெற்றியில் தணல் கொழுந்துகள் தாவுகின்றன . அவர்களது ரோசா சிறகுகளிலிருந்து அனல் பொறிகள் , இரையுங் கடலில் பல சூரியன் மின்னுவது போல தங்கக் கதிர்கள் போல் பறக்கின்றன . என்ன இனிமையான கீதங்கள் இசைக்கின்றனர் !

கன்னித்தாய் மனுக்குலத்திற்கு மாதிரிகை . மனுக்குலத்தின் பிரதிநிதியாக மேலோகம் செல்லுகிறார் . ஒரு நாள் அவரது மக்களாகிய நாமெல்லோரும் அவரோடு அவருடைய ஆனந்தத்தில் இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் ஆசையல்லவா ? இந்நோக்கத்தின் அறிகுறி ,அச்சாரம் தேவதையின் மோட்ச ஆரோபணம் . இறைவனின் தாளத்தின் பெருக்கம் இது தான் !

ஏழாம் நூற்றாண்டில் அர்ச். தமாசின் அருளப்பர் நிகழ்த்திய சொற்பொழிவின் இரண்டொரு மொழிகளைக் கேட்பீர்களா ? உயிருள்ள தேவனின் பரிசுத்த பேழை , தம் உத்தரத்தில் தமது இரட்சகரைத் தாங்கிய பேழை , கரங்களால் ஆகாத ஆண்டவரின் ஆலயத்தில் இளைப்பாறுகிறது . அவரது முன்னோரான தாவீது மகிழ்கிறார் . அவரோடு சம்மனசுக்கள் நர்த்தனம் செய்கின்றனர் . அதிதூதர்கள் தோத்திரம் பாடுகின்றனர் . பரிசுத்தர் மரியின் மகிமையைப் புகழ்ந்து கானம் இசைக்கின்றனர் . சத்துவர்கள் மாற்றி மாற்றி பண் இசைக்கின்றனர் . ஞானாதிக்கர்கள் பல புகழ்கள் சமர்ப்பிக்கின்றனர் . பக்தி சுவாலகர்கள் அவர் புகழைச் சாற்றுகின்றனர்

இன்று புதிய ஆதாம் உயிருள்ள பூங்காவை ஏற்றுக் கொள்ளுகிறார் . சாபம் நீக்கபெற்றது . சீவிய விருட்சம் நடப்பட்டது . ஆதாமுக்கு வந்த சாபத்தால் தேவ அருளின் ஆடையை இழந்தோம் , நமது ஆடையில்லா கோலம் அலங்கரிக்கப்பட்டது

இன்று உலக நாட்டத்தால் கறைபடாக் கன்னிகை மோட்ச எண்ணங்களால் ஊட்டம் பெற்றவள் - அவளே சீவிய மோட்சமானபடியினால் - மண்ணுக்குத் திரும்பவில்லை . மோட்ச கூடாரங்களுக்குள் வரவேற்கப்பட்டார். அவரிடம் இருந்து அல்லவா யாவருக்கும் சீவியம் வழிந்தது . அவர் எவ்விதம் சாவை ருசிக்கலாம் ? உயிருள்ள தேவனின் தாய் அவரிடம் தூக்கிச் செல்லப்படுவது எவ்வளவு நியாயம் ! பாம்பின் சோதனைக்கு உட்பட்ட ஏவை குழந்தைப் பேற்றில் துன்பப்பட சபிக்கப்பட்டாள் ; சாவின் தண்டனை விதிக்கப்பட்டாள். அதல பாதாளத்தில் ஆழ்த்தப்பட்டாள். ஆனால் இறைவனுடைய குரலுக்குச் செவிசாய்த்தவர், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவர் மானிட உதவியின்றி தன் மகனைக் கர்ப்பம் தரித்தார் , யாதொரு வாதனையின்றி ஈன்றெடுத்தார் . அவரை இறைவனுக்கு முழுமையும் நேர்ந்து கொண்டார் . அவரைச் சாவு அழிக்க முடியுமா ? சீவியம் உருவெடுத்த உடலில் நாச நாற்றம் நுழைய முடியுமா ? மோட்சத்துக்குச் செல்லும் நேர் பாதை அவருக்கு வகுத்திருக்கிறது . " நான் இருக்கும் இடத்தில் என் ஊழியன் இருப்பான் " என்று உண்மையும் உயிருமான கிறிஸ்து சொல்லி இருக்கும் போது அவர் தாய் அவரோடு இருக்க வேண்டாமா ?

தேவதை ஆரோபணமான திருநாளில் வாசிக்கும் நற்செய்தி மரியா மார்த்தா வீட்டில் இயேசு தங்கி இருந்த நாளைப் பற்றியதல்லவா ?ஏன் ? அர்ச் அகுஸ்தீன் பதில் இறுப்பார்: மார்த்தா விருந்து தயார் செய்தார் . மார்த்தா மாசற்றவள் , நமதாண்டவருக்கு உணவளிப்பதிலேயே கவனமாக இருக்கிறாள் மரியா ஆண்டவர் வார்த்தையைக் கேட்ட வண்ணமே இருக்கிறாள் . மரியா ஆண்டவரிடமிருந்து உணவு பெறுகிறாள் . மார்த்தாளின் உயிர் உலகின் உயிர் . மரியாளது உயிர் மோட்சத்திற்கு உரியது

இந்நற்செய்தி கன்னித் தாய்க்கும் பொருந்தும் . அவர் மார்த்தாளும் மரியாளும் சேர்ந்தவர் . நாசரேத்தூர் வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்கு உணவு ஊட்டினார் . நம் ஆண்டவரால் உணவு ஊட்டப்பட்டார். அவர் உழைத்தார் , இளைப்பாற்றினார் .மோட்ச வாழ்க்கையைப் பூமியில் நடத்தினார். இயேசுவின் மறைந்த மகிமையை இயேசு மறுரூபமானபோது அப்போஸ்தலர் கண்டனர் . தாயின் மறைந்த மகிமையை பரலோக ஆரோபணத்தில் கண்டனர் . பூலோக வாழ்வில் தாயின் மகிமை திரையிடப்பட்டு இருந்தது.

இயேசுவின் ஆரோகணத்துக்குப் பின்னும் மார்த்தாளின் அலுவலை அன்னை விட்டுவிடவில்லை. அருளப்பரைப் போஷித்தார் . அவர் எப்போதும் தியானத்தில் புதைந்தவர். இரு சகோதரிகளும் வசித்த இல்லம் எது ? ஆண்டவரின் தாயாருடைய கன்னி உதரமாம். அங்கு அவர் தன் குழந்தையைப் போஷித்தார் . தன் குழந்தையிடம் உணவைப் பெற்றார். என்ன உணவை ? வார்த்தையையும் ஆண்டவரின் ஞானத்தையும்!

பரிசுத்த ஆவியின் வருகை.



திருச்சபையின் முதல் நவநாள் ஆரம்பித்தது . இயேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவ தாயும் அப்போஸ்தலர்களும் கூடி பரிசுத்த ஆவியின் வருகைக்காக செபத்தில் நிலைத்திருந்தனர். பத்தாம் நாள் பெரும் புயல் காற்று வீசியது . தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் பரிசுத்த ஆவி அக்கினி ரூபமாய் இறங்கி வந்தார் .

மனுதாவதாரத்தின் அலுவல் அன்பின் அலுவல் . ஒவ்வொரு மனிதனின் ஆத்துமத்திலும் - ஒவ்வொருவனும் அந்த அன்பில் பங்கு பெற்று , அதைத் திருப்பிக் கொடுப்பதால் - அந்த அலுவல் முற்றுப் பெற வேண்டும் . தம் தயாளத்திற்கு அளவேயில்லா மோட்ச பிதாவானவர் தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளை , தேவ சிநேகத்தின் ஆவியை அனுப்பி வைத்தார் . ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் விருந்தினரைப் போலும் , வழிகாட்டியாகவும் ,ஆலோசனை தருகிறவராகவும் தைரியம் ஊட்டுகிறவராகவும் வசிப்பார். அன்பின் ஆண்டவர் நமக்களித்த எல்லாக் கொடைகளிலும் அவர் தான் பெருங் கொடை. அவர் தேவ சிநேகத்தின் ஆளல்லவா ? இரண்டாம் தேவ ஆள் உலகத்திற்கு வந்து யாவருக்கும் சம்பாதித்த ஈடேற்றத்தை இரட்சணியத்தை ஒவ்வொருவரிடமும் உத்தமமாக்க வேண்டியவர்

பார்வைக்குரிய அளவில் தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் வந்த வரைக்கும் , உறுதிப்பூசுதலில் காணக்கூடாத விதமாய் ஒவ்வொருவர் மேலும் வருவதற்கு அது சான்று . கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது . இறைவனுடைய அன்பு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இறங்கி அதில் ஊன்றிப் போய் - உண்பதும் , குடிப்பதும் ,ஓடுவதும் , ஆடுவதுமான - நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஞான மதிப்பளித்து அது அன்பின் ஒளியாகத் திகழ வேண்டும்

பரிசுத்த ஆவியின் வரவு திருச்சபையின் பரம இரகசியம் . பலவீனர்களான அப்போஸ்தலர்கள் பலசாலி ஆனார்கள் . விவேகமற்ற அப்போஸ்தலர்கள் ஞானி ஆனார்கள் . தன் ஊர் தன் கிராமம் என்று ஒடுங்கிய அற்ப புத்தியுள்ளவர்கள் பரந்த உலகின் மக்களாயினர். பாடுகளின் காலத்தில் பயந்து ஓடி ஒளிந்து - இயேசுவின் உத்தானத்திற்குப் பின் உயரிய நோக்கமின்றி - இந்நேரமாவது இஸ்ராயேலரின் அரசியலைத் திரும்ப எழுப்புவாரா என்று கேட்டார்கள் அல்லவா ? இப்பொழுது ஞானோதயம் பிறந்தது , பலம் வந்தது , உலகமெங்கும் போய் போதித்து தங்கள் போதனையின் உண்மைக்குச் சான்றாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்

பிரகாசத்தின் பிரவாகத்தை - வெள்ளத்தை - புனித இராயப்பரின் முதல் பிரசங்கத்தில் காணலாம் . உலகின் பற்பல கோடியிலிருந்து பற்பல மொழிகள் பேசுகிறவர்கள் , இராயப்பர் அரமேயிக் மொழியில் போதித்தாலும் அதை ஒவ்வொருவனும் தத்தம் மொழியில் கேட்டான் . வேதாகமம் விளங்கியது ; உத்தானம் , ஈடேற்றம் முதலியவற்றின் பொருள் விளங்கியது . தடுமாற்றம் இல்லை . அந்நாளே மூவாயிரம் பேருக்கு மேல் மனந்திரும்பினர் . மற்ற ஒவ்வொரு பிரசங்கத்திலும் ஆயிரமாயிரம் பேர் மனந்திரும்பினர் . இயேசுவின் பேரால் நோயாளிகளுக்குச் சுகத்தை கொடுத்தார் .

ஆண்டவரை மறுதலித்து மறைந்து பதுங்கியவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக - முதல் பாப்பாண்டவராக - எல்லா உரிமையையும் கொண்டாடினார் .

அக்கினி ரூபமான நாவுகள் :

பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள் கண்டு கொள்ளுவார்கள் . அக்கினி , ஆத்துமார்த்ததினுடையவும் பரிசுத்த தனத்தினுடையவும் அடையாளம் . சுத்தம் செய்து தெளிவைக் கொடுத்து நீதி செலுத்தும் கடவுளுடைய நிகரில்லா வல்லமையின் அடையாளம் . பரிசுத்த ஆவியின் மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் பார்த்தவர்களுக்கு விதவிதமான வரப்பிரசாதத்தைக் கொண்டு வந்தார் என்பது தெரியும் .நிறைந்த அருளைக் கொண்டு வந்தார் . பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் நிரப்பப் பெற்றார்கள் என்றது வேத வாசகம் . நிறைந்த இறை அருள் , அந்தஸ்துக்கு அவசியமான இறை அருள் , கேட்கிறவர்களுக்கும் போதிக்கிறவர்களுக்கும் அவசியமான நிறைந்த அருள் - இவைகளைக் கொணர்ந்தார்

பரிசுத்த ஆவி அன்பின் ,அருளின், இரக்கத்தின் , சமாதானத்தின் தேவன் . உலகை ஒரு புதிய பிரசன்னத்தால் மகிமைப்படுத்தவும் , அர்ச்சிக்கவும் , ஆறுதல் அளிக்கவும் அகமகிழச் செய்யவும் வந்தார்

பரிசுத்த ஆவி வந்தார் , போய்விடவில்லை; இருக்கிறார் . உலக முழுவதையும் நிரப்பினார் . திருச்சபையான அவரின் ஞான சரீரத்தின் அவயவங்கள் நாம் ; நம்முடைய அலுவல் அவரது பிரசன்னத்தை உலகம் அறியும்படி செய்வதாம்.

கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்.


இயேசுநாதர் தம் அலுவலை முடித்து விட்டார் . திருச்சபையின் அமைப்பை வகுத்து விட்டார் . அவர் மோட்சத்துக்குப் போவதனால் நமக்குப் பெரும் பயன் உண்டு . தமது மோட்ச ஆரோகணத்தால் நம்மில் விசுவாசத்தின் வாழ்வை உறுதிப்படுத்தினார் . நமக்காக ஏற்கனவே அவர் மோட்சத்தை சுதந்திரித்திருந்தபடியால் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் . பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பும் மகிமையான கொடைகளினால் விசேசமாய்த் திவ்விய பரிசுத்த ஆவியை அனுப்புவதினால் நம்மில் தேவ சிநேகத்தையும் அதிகரித்தார் . அவர் மோட்சத்திற்கு ஏகியிராவிடில் பரிசுத்த ஆவி நம்மேல் இறங்கி வந்திருக்க மாட்டார். மோட்சமும் நமக்குத் திறந்திராது

இதைப் பற்றி அர்ச் அகுஸ்தீன் சொல்லுகிறார் "இயேசுவின் உத்தானம் நமது நம்பிக்கை . அவருடைய ஆரோகணம் நமக்கு மகிமை . இயேசுவின் மோட்ச ஆரோகணத் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் . சரியான விதமாக விசுவாசத்தோடும் , பக்தியோடும் , பரிசுத்தமாகவும் அன்போடும் ஆண்டவரின் ஆரோகணத்தைக் கொண்டாடுவோமேயாகில் நாம் அவரோடு மேலே ஏற வேண்டும் . அங்கு நம் இதயம் உயர வேண்டும் . மேலேறுகையில் கர்வம் மேலே ஏறக் கூடாது . நமது பேறுபலன்களைக் கொண்டே நாம் மேலே போகிறோம் என்ற மதி மோசம் இருத்தலாகாது . ஆண்டவருக்காக என்பதை மறந்து உயரப் பறப்பது அகங்காரம் . ஆண்டவரோடு நம் உள்ளம் மேலே போகுமேயாகில் அது நமது சொந்த வீடேகுவதாம்
கவனியுங்கள் சகோதரர்களே என்ன அதிசயம் ! கடவுள் மேலே இருக்கிறார் . நீ மேலே ஏறப்பார். அவர் உன்னை விட்டுப் பறந்து விடுகிறார் . தரைமட்டம் உன்னைத் தாழ்த்து . அவர் உன்னிடம் கீழே வருகிறார் . இது ஏன் ? ஆண்டவர் உயர்ந்தவர் . தாழ்ச்சியுள்ளவர்கள் மேல் தன் கண்ணைத் திருப்புகிறார் . உயர்ந்தவர்களை எட்டி நின்று பார்க்கிறார் . தங்களைத் தாழ்த்துகிறவர்களை அருகிலிருந்து இரக்கத்தோடு எழுப்பி விடுகிறார் . அகங்காரமுள்ள பெரியோரை எட்டி நின்று பார்த்துக் கீழே உருட்டி விடுகிறார்

ஆண்டவரின் ஆரோகணம் மனித சுபாவத்தின் ஆடம்பர வெற்றி . என்றென்றுக்கும் கடவுளும் மனிதனுமான இரண்டாம் தேவ ஆளோடு ஒன்றித்து மோட்சம் கொண்டு போகப்படுகிறோம் . இயேசுநாதருடைய பாடுகளாலும் மரணத்தாலும் அவருடைய மனித சுபாவம் மோட்சத்தில் எல்லா சிருஷ்டிகள் மேல் அரசுரிமை பெற்றது . தேவ சுபாவத்தில் அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமம் . மனித சுபாவத்திலும் தேவ வல்லமையிலும் சுதந்திரம் பெற்று மனுக்குலத்திற்கே நீதிபதியும் அதிபதியும் ஆனார் . முள்முடி தான் அவரது ஆட்சியின் சுதந்திரத்தின் சின்னம் . அவர் கரத்தின் மூங்கில் கோல் நீதி செலுத்த அவருக்குள்ள அதிகாரத்தின் சாட்சி . அவரது கரங்களிலும் கால்களிலும் உள்ள காயங்கள் பேயின் மேலும் உலகின் மேலும் உடலின் மேலும் அவர் கொண்ட வெற்றியைப் பறையடிக்கின்றன

இயேசுவின் ஆரோகணம் அப்போஸ்தலர்கள் உள்ளத்தில் அதிசயத்தையும் அக்களிப்பையும் ஊட்டின . இயேசுநாதர் தம் அலுவலை முடித்து ஆனந்தத்தில் மகிமையில் பிரவேசித்து விட்டார் . அவருக்கு இனிமேல் மகிழ்ச்சியும் மகிமையுமே . அவரது அரசுக்கு முடிவில்லை . ஆதலால் நாம் இயேசுவுக்காக மகிழ்வோம் . மோட்சம் இனிமேல் நமதே . நம்மைக் குறித்தும் அகமகிழலாம் . பாவத்தை எந்நாளும் தவிர்த்து நடப்பது சங்கட அலுவல் . எனினும் பாவமின்றி வாழ்ந்தால் போதுமென்ற தாழ்ந்த மனப்பான்மை நம்மிடம் தாமதிக்கலாகாது . புண்ணியத்தின் ஏணியில் மேலும் மேலும் ஏற வேண்டும் .இயேசுவோடு பந்திக்கும் ஐக்கியத்தில் நாளுக்கு நாள் அதிகம் நெருங்க வேண்டும் எனும் தீர்மானம் உறுதிப்பட வேண்டும்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.


கர்த்தர் உயிர்த்தெழுந்ததை நேரில் கண்டவர்கள் கல்லறைக் காவலர்களே . "மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால் , மரித்தவர்களிடத்திலிருந்து ஒருவர் உயிர்த்து வந்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் " என்று இயேசு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையானது .

அப்போஸ்தலர்களுக்குப் பயம். இயேசுநாதர் உயிர்த்ததைக் கேட்டு பயம் , உயிர்த்த இயேசுவைக் கண்டு பயம் . விசுவாசம் எவ்வளவு மெதுவாய் அவர்கள் உள்ளத்தில் ஊர்ந்தூர்ந்து உதித்தது . தாம் உயிர்த்து வரப் போவதாக இயேசுநாதர் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார் . இயேசு உயிர்த்தெழுந்ததாக சம்மனசுக்கள் கூறியும் , தரிசனை கண்ட பெண்கள் கூறியும் , தாங்களே இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்னும் உடனே அவர்கள் விசுவசிக்கவில்லை.

அப்போஸ்தலர்களின் பயத்துக்குக் காரணம் என்ன ?மரித்தவர் உயிர்த்து வந்தால் யாவருக்கும் பயம் தான் . ஆண்டவர் உயிர்க்க வேண்டும் என்னும் வேத வாசகத்தை விசுவாசிக்கததால் வந்த பயம் . உயிர்த்த இயேசுவின் மகிமையையும் பிரகாசத்தையும் கண்டு கலங்கினார்கள் . இந்நிலையில் அவரைப் பார்த்தும் அறிந்து கொள்ளவில்லையே . அவரை விட்டு ஓடி ஒளிந்து அவரை அவர்கள் மறுதலித்து விட்டபடியால் இப்போது பயம்

எனினும் அச்சம் ஒரு பக்கம் , மகிழ்ச்சி மறு பக்கம் . சந்தோசம் ,பயத்தை முற்றும் விரட்டிவிடவில்லை . அவர்கள் பயந்தார்கள் , மகிழ்ந்தார்கள் . சமயத்துக்குச் சமயம் குறுகிய நேரம் ஒன்றாய் வாழ்ந்தனர் . ஏரிக்கரையில் நிற்கிறார் . அவர்களோடு உண்கிறார் ,அவர்களுக்குப் போதிக்கிறார் . தேற்றரவானவரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் அவரது மனித சுபாவம் பூண்ட தேவ ஆளின் பரம இரகசியத்தை , அவர் கொண்டு வந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கற்பித்தபின் மறைந்தார்

அவரது உத்தானத்தால் நம்மில் நம்பிக்கையை வளர்க்கிறார் . அவர் எழாதிருந்தால் மரித்தவர்களில் ஒருவரும் உயிர்த்து எழுந்திரார். அவரது உத்தானம் நமது உத்தானத்தின் அச்சாரம், அடையாளம் , அவர் ஜெயித்தார் . நம்மையும் ஜெயம் பெறச் செய்வார் . கிறிஸ்துவோடு நாம் உயிர்த்த வாழ்க்கை நடத்த வேண்டும் . "இயேசுவோடு உயிர்த்திருப்பீர்களேயாகில் மேலிருக்கும் காரியங்களை நாடிச் செல்லுங்கள் "

உத்தானத்தினால் வந்த புது வாழ்க்கையைத் திருச்சபை தன் சடங்கு முறையில் துலங்க வைக்கிறது . புது நெருப்பு மந்திரிக்கப்படுகிறது . ' கிறிஸ்துவின் ஒளி' என்ற கீதத்தில் திரி அர்ச்சிக்கப்படுகிறது . மக்கள் உள்ளத்தை கழுவி இயேசுவின் திரு இரத்தத்தில் வெண்மையாக்க குளிர்ந்த நீர் மந்திரிக்கப்படுகிறது . மகிழ்ச்சியின் அடையாளமாக மணிகள் ஒலிக்கப்படுகின்றன . பிரார்த்தனை பாடப்படுகிறது . அதில் உயிர்த்த ஆண்டவர் பாதம் நம் குறைகள் யாவையும் சமர்ப்பிக்கிறோம் . அவருக்கு நம் மேல் கவலை உண்டல்லவா? புதிதாய் மந்திரித்த தூபமும் வான் நோக்கிப் பறக்கிறது

இயேசுவின் உத்தானம் அவரது தெய்வீகத்திற்கு அசையாத சாட்சி , பூமியில் அவர் கொண்டு வந்த போதனையின் பிணை ; அவரோடு வர இருக்கும் மகிமையின் அச்சாரம் . இயேசுவின் உத்தானம் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஞான ஜீவியத்தில் வாழவும் வளரவும் மனிதனுக்கு வல்லமை அளித்தது

அவர் ஒரே தரம் மரித்து நித்திய ஜீவியத்தில் சேர்ந்தார் . நாம் ஒவ்வொரு நாளும் சாக வேண்டும். திரும்பத் திரும்ப எழ வேண்டும் . அதாவது நம்மில் பழைய மனிதனை , பழைய ஆதாமைக் களைந்து விடுவது , இயேசுவோடு முற்றிலும் மரிப்பது , பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அடியோடு சாவது . இவை யாவும் வாழ்நாள் முழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவல் . சுய ஒறுத்தலாலும் தபத்தாலும் நாம் தினம் தினம் மரிப்போமேயாகில் மாமிச இச்சையின் குழியிலிருந்து கல்லறையிலிருந்து ஒவ்வொரு நாளும் எழுந்து கடவுளின் வளர்ப்புப் பிள்ளைகளின் மகிமையில் சேருவோம்

உயிர்த்த இயேசு தன் தாய்க்குத் தானே முதலில் தோன்றி இருப்பார்? சொல்லொணா மகிமை பூண்டு வந்த மகனைக் கண்டார் . அவரது அதிசயத்தையும் ஆனந்தத்தையும் அன்பு வளர்ச்சியையும் அறிகிறவர் யார்?

இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.



தாமே தெரிந்து கொண்ட அரியணையில் நம் இயேசு வீற்றிருக்கிறார் . தம் உயிரைப் பலியாகக் கொடுத்து சரீரத்தின் சாவின் மேலும் அதைவிட பயங்கரமான ஆத்தும சாவான - அருளையும் ஞான உயிரையும் மக்களிடமிருந்து பறிக்கும் - பாவத்தின் மேலும் வெற்றி கண்டார். வான மேகத்தைப் போல் கருணையை எங்கும் பொழிகிறார் . தம் தாயையும் தம் நேச சீடரையும் தானம் செய்தார். கடவுளே தம்மைக் கை விட்டது போலக் கலங்கினார் . எனினும் தன்னல சிந்தனையின் நிழல் முதலாய் இன்றி மக்கள் மேல் தன் அன்பைக் கொட்டுகிறார். தம்மை வாதித்தவர்களுக்கு மன்னிப்பை மன்றாடுகிறார் . தன்னை நினைத்தருளச் சொன்ன நல்ல கள்ளனுக்கு பரகதியின் பாக்கியத்தைப் பரிமாறுகிறார் . பாவத்திற்காக மனிதன் கொடுக்க வேண்டிய கடனை , கடவுளுக்குத் தம் அன்பின் மிகுதியால் அளிக்கிறார் .

கிறிஸ்து கடவுள் ; தேவ ஆள் தான் நமக்காக மரித்தவர் ; கிறிஸ்து மனிதன் ; மனிதனுக்காக தம் மனுஷ சுபாவத்தில் மரித்தார். சிலுவையில் ஒரு புதிய மனுஷீகம் , ஒரு புது சிருஷ்டிப்பு பிறந்ததென்றார் சின்னப்பர் . நாம் அதனுடைய அவயவங்களாகி தேவ சுபாவத்தில் பங்காளியாகிறோம் என்றார் அர்ச் இராயப்பர்.

மனுக்குலத்துக்காக ஞான சீவியம் ஆதாமுக்கு அளிக்கப்பட்டது . இறைவனுடைய சித்தத்தைப் புறக்கணித்து தன் இஷ்டத்தை பெரிதாய்க் கருதி நித்திய பாக்கியத்துக்கு பதில் - ஒரு வினாடி சுகத்திற்காக இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் - அதை அவன் இழந்தான்

கிறிஸ்துநாதர் ஞான வாழ்வை மனுக்குலத்திற்குத் திரும்பப் பெற்றார். இறைவனுடைய சித்தத்திற்கு மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்தார் . மனிதனுக்கு நித்திய பாக்கியத்தைச் சம்பாதிக்க வாதனையை தெரிந்து கொண்டார்

ஆதாம் பாவம் செய்த பின் தான் ஆடையின்றி இருப்பதாக உணர்ந்து ஓர் ஆடையைத் தயாரித்துக் கொண்டான் . கிறிஸ்து நாதரோ தம் ஆடையைக் களையவும் மனித கௌரவத்தையே இழக்கவும் அட்ட தரித்திரத்தை சூடவும் தெரிந்து கொண்டார்

"நீங்கள் கடவுளைப் போலாவீர்கள் " என்ற சோதிப்போனை ஆதாம் நம்பினான் ; கடவுளைப் போலறிய ஆசித்தான் ; கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தான் . கிறிஸ்துநாதர் இறைவனுக்கு கீழ்ப்படிந்ததால் நாம் கடவுளைப் போலாக - தேவ சுபாவத்தில் பங்கு பெற நமக்கு ஆற்றலை அளித்தார்

ஏவை ஆதாமைப் பாவத்திற்கு சோதித்து அவன் வீழ்ச்சிக்கு - மனுக்குல வீழ்ச்சிக்குக் காரணமானாள். நம்மாண்டவளோ உலகின் ஈடேற்றத்திற்கு தம் மகனை உலகிற்கு அளித்தார் . ஈடேற்ற அலுவலில் பங்கு பெற்ற சிலுவையினடியில் நின்றார். மனுக்குலம் இன்பத்தின் பூங்காவில் பிறந்தது ;ஆதாமின் விலாவிலிருந்து வந்த ஏவை அதன் தாய் . கடவுளின் தாயாகிய மாமரி அவருடைய மகனின் புத்துயிரோடு வாழும் சீவியர்கள் யாவருக்கும் தாய் . கிறிஸ்துவின் ஞான சரீரம் , சிலுவையில் வாதனைப் பெருக்கில் தொங்கிய கிறிஸ்துவின் ஈட்டியால் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்தது ; மாமரி அதன் தாய் .

இயேசுவின் மரணம் அவர் மெய்யாகவே மனிதன் என்று உறுதிப்படுத்துகிறது . அவரது தெய்வீகத்திற்கும் சாட்சி . தாம் தேவ குமாரன் என்ற சத்தியத்தை நிலை நிறுத்தியதால் மரித்தார் - அப்பொழுது நடந்த புதுமைகளும் சேர்ந்து அவர் தேவன் என்று கூறுகின்றன . மனிதர்களின் ஆத்துமத்தை ஈடேற்றவல்லவா இயேசு உயிர்விட்டார் ? இயேசுவின் சாவு , ஆத்துமத்தின் விலை மகா உயர்ந்தது என்று பறை சாற்றுகிறது

இயேசுவின் மரணம் பாவத்தின் கனத்தையும் , இறைவனின் நீதியையும் , பாவப் பரிகாரத்தையும் காட்டுகிறது . இயேசுவின் பாடுகள் யாவும் முதல் தொடங்கி கடைசி மட்டும் இச்சத்தியங்களை நிலை நாட்டுகின்றன

எல்லா வரப்பிரசாதத்திற்கும் ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் வழியாக நமக்கு வரும் அருளுக்கு இயேசுவின் பாடுகள் ஊற்று . தம் பாடுகளில் இயேசு எல்லா அருளையும் சம்பாதித்தார்.

சிலுவையில் பாடும் சாவும் , முதல் பூசை . இன்று திவ்விய பூசைக்குப் போகும்போது கல்வாரியின் காட்சியை காணப் போகிறோம் என்று நினைப்போமாக . குருவானவர் தேவ நற்கருணையை எழுந்தேற்றம் செய்யும்போது , கீறிக்கிழித்த இயேசுவின் உடலை , எலும்புக் கூட்டைக் காண்கிறோம் . குருவானவர் பாத்திரத்தை உயர்த்தும் போது அப்பாத்திரத்தில் என்ன இருக்கிறது ? இயேசுவின் சிரசிலிருந்தும் , தேகத்திலிருந்தும், விலாக் காயத்திலிருந்தும் ஓடி விழுந்த திரு ரத்தம் அங்குள்ளது . உலகத்தையே மீட்க வல்லது . இறைவனுக்கு சரியான ஆராதனையையும் , மெய்யான மகிழ்ச்சியையும் கொடுப்பது .

திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.


தாமே தெரிந்து கொண்ட கிரீடத்தை அணிந்து மகிமையின் அரசர் எருசலேம் நகர் வீதி வழியாய் பவனி செல்கிறார். கல்வாரி மலையில் அவரது சிங்காசனத்தைத் தயாரிப்பர். அதை நோக்கிச் செல்லுகிறார். என்ன கொடிய வாதனை , கொள்ளும் நடை ! சிலுவையின் தாங்கொணாப் பாரத்தினால் தயங்கித் தடுமாறி பற்பல முறை கீழே விழுந்து எழுகிறார் . போகப் போக சன வெள்ளம் பெருகுகிறது . அங்கிருந்து அவச் சொல்லும், பழி வசனமும் அலை அலையாய் ஆண்டவர் மேல் விழுகின்றன . பேயோடு கடைசி முறை போராடி வெற்றிமுடி சூடவே போய்க் கொண்டிருக்கிறார்.

இப்பவனியின் பாதையில் பற்பலர் தோன்றி மறைகின்றார்கள் . அவர்களைப் பார்க்கலாம் . அக்காட்சிகளைப் பற்றி யோசிக்கலாம் . வெரோணிக்காள் பயத்தைப் பாராட்டாமல் கூட்டத்திற்குமுன் பாய்ந்து , இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார். உடனே கைம்மாறும் பெறுகிறார் . எருசலேம் மாநகர் புண்ணியவதிகள் தனித்தும் கூட்டமாகவும் வந்து ஆண்டவரின் அநியாய அக்கிரம அகோர வாதனையைக் கண்டு கண்கலங்கிக் கதறி அழுகிறார்கள் . சிமியோன் நம்மில் ஒருவனாகத் தோன்றுகிறான் அல்லவா ? வேறு எண்ணங்களும் உதிக்கலாம் . அச்சமயம் அப்போஸ்தலர்களின் எண்ணம் என்ன ? உணர்ச்சி என்ன ? அவர்கள் ஓடி விட்டார்கள் என நாம் அறிவோம் . எங்கே ஓடி இருப்பார்கள் ? இந்நகரில் தான் வீடுகளில் நுழைந்து நடப்பதைக் கதவு இடுக்கு வழியும், ஜன்னல் வழியும் இலேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் . என்ன யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் கேள்வி . இயேசுவின் வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவரும் வீற்றிருக்க வேண்டும் என்று அர்ச் யாகப்பரும் அருளப்பரும் கேட்ட போது ஆண்டவர் சொன்ன பதில் அவர்களது உள்ளத்தை உறுத்தியிருக்கலாம் . " நீங்கள் கேட்பது யாதென நீங்கள் அறியீர்கள் . நான் பானம் செய்யும் பாத்திரத்தை நீங்கள் பானஞ் செய்ய முடியுமா ? " என்ற கேள்விக்கு " முடியும் " என்றார்களே . ஆனால் அர்ச் யாகப்பர் மட்டும் அன்று அவரது விண்ணப்பத்தைக் கேட்டு சீறி விழுந்த இதர சீடர்களும் ஆண்டவர் தனியே அக்கசப்பான பாத்திரத்தைக் குடிக்க விட்டு ஓடி ஒளிந்தனர்

இயேசு மொழிந்த வேறு புத்திமதியும் அவர்கள் நினைவுக்கு இப்பொழுது வந்திருக்கும் . "யார் யார் தன் சிலுவையைச் சுமந்து என் பின் வராமலிருக்கிறாரோ அவர் என் சீடனாயிருக்க முடியாது " அவ்வார்த்தை அப்பொழுது கடினமாயிருந்தது . இப்பொழுது முன்னரை விடச் சந்காமாகத் தோன்றியது

எனினும் தாங்கள் தவறினோம் , தங்களுக்குத் தோல்வி என்று மனம் நொந்தனர் . யோசிக்க யோசிக்கத் தங்கள் தவறைப் பெரிதும் உணர்ந்தாலும் தாங்கள் பதுங்கிய இடத்திலிருந்து வெளிவர அவர்களுக்குத் துணிவில்லை . ஆகிலும் பின்னொரு நாள் ஆண்டவருக்கு உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள் .

"எவனாவது என்னைப் பின்பற்றி வர ஆசிப்பானேயாகில் அவன் தன் சிலுவையைத் தினம் தினம் தூக்கிக் கொண்டு என் பின் வருவானாக " என்றது யாவருக்கும் பொருந்தும் . விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாவரும் தங்கள் வாழ்நாளில் சிலுவையைச் சுமந்தாக வேண்டும் . நல்ல மனதோடு தூக்கிச் சென்றால் நித்திய மகிழ்ச்சி அவர்களை வரவேற்கும் . வேண்டா வெறுப்பாய் தூக்கிச் செல்வது நித்திய கேட்டுக்குள் அவர்களை இறக்கி விடும் . பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வுத் தளம் வெவ்வேறு துன்பங்களாலும் பாவங்களாலும் சிலுவைகளாலும் பாவப்பட்டிருக்கிறது . இயேசுவோடு பாவத்தின் சிலுவையைத்தான் சுமந்து செல்கிறோம் . தவறி விழுவோமேயாகில் சிலுவையின் கீழ் இயேசு விழுந்ததை நினைவுற்று விழும் ஒவ்வொரு முறையும் மிகவும் ஆழ்ந்த மனஸ்தாப வரத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும்.

சிலுவையின் பாதையில் தம் மகனைச் சந்தித்தாரே தேவ தாய் , அவரது வியாகுலப் பெருக்கை அறியக் கூடியவன் யார் ?

இக்காலத்தில் வேத விரோதிகளால் பறித்துக் கொண்டு போகப்படுகிறார்களே மக்கள் , அவர்கள் படும் பாட்டை நினைக்கும்போதே தாய்மார்களின் மனம் நடுங்குகிறது . சில சமயம் அதைச் சகிக்க முடியாதென்றே நமக்குத் தோன்றுகிறது .மகனின் பாடுகளைக் கண்ட மாமரி எவ்விதம் மனம் உடைந்திருக்க வேண்டும் .நமதாண்டவர் செய்ததை நன்றாய்க் கண்டறிந்தவர் தேவதாய் ஒருவரே . அவர் யாருக்காக இந்தக் கொடிய பாடுகளை அனுபவித்தார் என்றும் அவருக்குத் தெரியும் (கன்னித்தாய் உலகின் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும் ) யாருக்காக இயேசு பாடுபடுகிறார் என்றறிந்து அதை ஏற்றுக் கொண்டார் . அவர் கிறிஸ்துவின் தாய் , கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் தாய் . அவர் வழியாகத்தான் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆனோம்.

சேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுகிறார்கள்.


குரூர கேளிக்கைகளைக் கண்டு ஆனந்தித்த மனிதன் புலியைப் போல மாறுகிறான் . குரூரச் செயல்களைப் பெருக்க ஆசிக்கிறான் . கற்றூணில் ஆண்டவர் அனுபவித்த வாதனையைக் கண்டு ஆனந்தித்த ரோமை மிலேச்ச சேவகர்கள் இன்னொரு வேடிக்கையைச் சிந்தித்தனர் . அவர்களுக்கு யூதர்கள் மேல் சொல்லொணா அலட்சியம் , அருவருப்பு ; தங்கள் அரசைத் துரத்தி விட தேடுகிறார்கள் என பகையும் வன்மமும் கூட . தாம் யூதர்களுக்கு அரசன் என்று இயேசுநாதர் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டார் அல்லவா ? அவருக்கு அரச மரியாதை காட்டி ஆகடியம் செய்ய வேண்டுமென இந்த அக்கிரமிகளின் வறண்ட சிரசில் சிந்தனை ஓடியது.

தட்டுத் தடுமாறி மூச்சு விட கூட முடியாமல் தவிக்கு இயேசுவை , உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆயிரம் தேள் கொட்டியது போல வெந்த இயேசுவை ஒரு மண்டபத்திற்கு இழுத்துச் சென்றனர் . கரடு முரடாக சில்லிப்பு தட்டும் உடைந்து கிடந்த சிறு தூண் மேல் தள்ளி அமர்த்தினர் . அதுதான் சிங்காசனம் .கந்தலான ஒரு சிவப்புத் துணியை அவர் மேல் போர்த்தினார் . அது அரச பீதாம்பரம் . ஒரு மூங்கில் தண்டை இணைக்கப்பட்டிருந்த அவரது கரங்களின் இடுக்கில் பொருத்தினர் . அது செங்கோல் . முடி வேண்டுமே ! என்ன செய்வர்? பொன்னாலும் மணியாலுமான முடியல்ல , பூவாலான முடி கூட அல்ல . ஒரு முட்செடியை பறித்தனர் . முட்கள் தங்களைக் குத்தாதபடி பதனமாய்க் குல்லா போல் அதை வளைத்துப் புனைந்தனர் . அதை ஆண்டவரின் சிரசில் வைத்தனர் . தடியால் அழுத்தினர் . தலை முழுதும் காயம் , நெற்றி முழுதும் காயம் , முட்களில் சில கண்களில் பாய்ந்தன . சில செவிக்குள் செருகின. சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் சொட்டுகிறது . நாகரீகமோ , மக்கள் மனப்பான்மையோ சிறிதும் இல்லா அந்த மாக்கள் இயேசுவின் இந்த எளிய பரிதாபக் கோலத்தைக் கண்டு கை தட்டினர் ; களித்தனர் . "இவர் தான் பெரிய அரசர் " என்று கோஷமிட்டனர் .

இக்காட்சியை கண்களால் காண்கிறோமா , காதால் கேட்கிறோமா ?உள்ளத்தில் எண்ணி எண்ணி உருகுகிறோமா? ஒரு விதத்தில் இக்கோலம் இவருக்குப் பொருந்தும் . இவர் பெரிய புரட்சி வீரர் அன்றோ ? மலைப் பிரசங்கத்தில் உலகம் மதிப்பதைஎல்லாம் புரட்டிப் போட்டு விட்டாரே ! தரித்திரம் , துன்பம் , இழிவு , மானபங்கம் ,அவமானம் , நிந்தை பரியாசம் தானே அவர் நிறுவ வந்த அரசின் சின்னங்கள் என்றார். இப்புரட்சி வீரரின் போதனையை நாம் கற்பதுமில்லை கையாளுவதுமில்லை . அப்போதகத்தைச் செயலளவில் காட்டுகிறார் , நம் உள்ளத்தில் பதிக்க.

எனினும் வியாகுலத் தாயே , இப்பரிதாபக் கோலத்தில் என் அன்பரை , என் மீட்பரைக் காண மனம் வேகுதே தாயே நீர் எங்கிருந்தீர் ? எங்கிருந்தாலும் இதைத் தெளிவாய்த் தரிசித்தீர் . மனம் நைந்தீர் கண்ணீர் பெருக்கினீர்.

சேவகர்கள் அவருக்கு முன் முழந்தாட்படியிடுகிறார்கள் . அவர் வதனத்தில் துப்புகிறார்கள் . கன்னத்தில் அறிகிறார்கள் . தடியால் ஓங்கி முள்முடி மேல் அடித்துக் காயத்தைப் புதுப்பிக்கிறார்கள் . வேதனையைப் பெருக்குகிறார்கள் . அவரது சிம்மாசனத்திலிருந்து அவரைத் தட்டி விடுகிறார்கள் அதைக் கீழே சாய்க்கிறார்கள் . என்ன அவமானம் ! என்ன அலங்கோலம் ! அவரது தலை உரோமம் சடை பிடித்துக் கண்களில் விழுகிறது . கண் இரத்தம் பாய்ந்து கிடக்கிறது . சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் ஒழுகி நெற்றியையும் , தலையையும், முகத்தையும் நனைக்கிறது

தாயே இங்கு அமர்ந்திருக்கிறவர் யாரென்று நான் முதலாய் முழுதும் உணர்ந்தேனா ? இந்த மிலேச்சர்கள் மத்தியில் இருந்து இக்கூரிய வாதனைகளை அனுபவிப்பவர் கோமாளி அரசனைப் போல் பகடி செய்யப்படுகிறவர். ஞானத்திலும் மகிமையிலும் மேலானவர் . ஆண்டவர் கிருபையால் பிரசித்தி பெற்ற சாலமோன் அரசரை விட பெரியவர் அல்லவா ? அருகில் அண்டவும் அரசிகள் முதலாய்ப் பயந்தரண்ட கீர்த்தி வேய்ந்த அசூவேரஸ் மன்னனை விட மகாப் பிரதாபம் உள்ளவர் அல்லவா? படையணியில் பராக்கிரம வீரரைத் துலங்கிய தாவீதரசனை விட கம்பீரமும் ஆரோக்கியமும் வாய்ந்தவரல்லவா? இவர் சுயஞ்சீவியான மெய்யங் கடவுள்.

இந்நேரம் முதலாய்க் கோடிக்கணக்கான வடிவும் வல்லமையும் பூண்ட வானதூதர்கள் மேல் தம் செங்கோலாட்சியைச் செலுத்துகிறார். அவரது ஓர் அடையாளத்தை எதிர்பார்த்து , அவர் பாதத்தில் அவர்கள் விழுந்து கிடக்கின்றனர் . ஆகிலும் வெறிகொண்ட ஈனமக்கள் மத்தியிலே அவர்கள் குவிக்கும் அவமரியாதையூடே வெட்கத்திலும் வாதனையிலும் வெந்து நொந்து அமர்ந்திருக்கிறார்.

இவர்தான் மெசியா . நீண்ட காலமாக மக்கள் காத்துக்கிடந்த மீட்பர் ; அவர்களுடைய அன்பையும் பாத காணிக்கையையும் ஏற்றுக் கொள்ள தம் செங்கரத்தை நீட்டிய தினத்தில் அவர் மக்கள் அவரை இவ்விதம் நடத்துகிறார்கள்.

அநியாயமான கேலியும் பரியாசமும் எவ்வளவு ஆழமாக மக்களின் உள்ளத்தைக் குத்திப் புண்ணாக்குகின்றன என்று நமக்குக் கற்பிக்கச் சித்தமானார் . வீண் பழிச் சொற்களாலான வேலால் நம் சகோதரர்களை வருத்தலாகாது .நமக்கு வரும் ஏச்சு பேச்சுக்களை அவரைப் போல் பொறுமையாக ஏற்றுக் கொள்ள இயேசு நம்மிடம் கேட்கிறார்.

கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.




கோழை உள்ளம் கொண்ட பிலாத்து இயேசுநாதர் குற்றமற்றவர், நீதிமான் என்று தெளிவடைந்திருந்தும் துணிந்து நேர்முகமாக இயேசுவை விடுதலை செய்ய அஞ்சி பற்பல குறுக்கு வழிகளில் அவரை விடுவிக்கத் தேடினான் . பலனில்லை .யூதரின் மனத்தைக் கரைக்க எண்ணியவனாய் இயேசுவைக் கசையால் அடிக்கக் கற்பிக்கிறான் . என்ன கேவலமான தண்டனை . மனித யோக்கியதையை இழந்த பெரும் அக்கிரமிகளுக்குத் தான் இந்த ஆக்கினை . இந்த ஆக்கினைக்கு ஆளானவன் நாலு பேருக்கு முன் தலை காட்ட அஞ்சுவான். எத்தகைய குரூரமான ஆக்கினை . கசையடி தாங்க மாட்டாமல் கட்டுமஸ்தான சரீரம் உள்ளவர்களில் பலர் அடிபடும்போதே சோர்ந்து செத்து வீழ்ந்திருக்கிறார்கள் . இயேசுவுக்கு நேர்ந்த இந்தக் கொடூர ஆக்கினையை நினைக்கும் போதே நாம் இதன் அர்த்தத்தை கண்டுபிடிக்காமல் மயங்குகிறோம் . மெய்யாகவே இறைவனுடைய இரகசியங்களில் இது ஒன்று

ஒரு தூணின் உச்சி நுனியில் ஆண்டவரின் கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன .கால் விரல்கள் தரையை தொட்டும் தொடாமலும் இருக்கின்றன .ஆண்டவர் தொங்குகிறார் என்று சொல்லலாம் . சாட்டை நுனியில் சிறு ஈயக் குண்டுகளோ , எலும்புத் துண்டுகளோ முடியப்பட்டிருக்கின்றன .சேவகர்கள் அடிக்க வருகின்றனர் . இதைக் கண்டு ஆண்டவரின் உடல் முதல் நிமிடம் நடுங்குகிறது .அடிக்கிறார்கள் , சதை புடிக்கிறது . இரத்தக் கீற்றுகள் பாய்கின்றன . தோல் உரிகின்றது சதை துண்டு துண்டாய்ப் பறக்கிறது . இரத்தம் ஆறாய் ஓடுகிறது . முதுகு, தோள், நெஞ்சு, முகம், கை, கால், தொடை எங்கும் சரமாரியாய் அடி . ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது ; பெருமூச்சு விடுகிறார். அனர்த்துகிறார். அடித்து முடித்தவுடனே எலும்புக்கூடாய் சதையும் குருதியும் சேர்ந்த சேற்றில் இயேசு விழுந்து புழுப் போல் நெளிகிறார். உருண்டு சென்று தன் ஆடையைத் தாமே தேடி எடுத்து அணிந்து கொள்ளுகிறார் .உதவிக்கு நாதியேது?

உடலின்பத்தைக் கருதி மக்கள் கட்டிக் கொள்ளும் அக்கிரமங்கள் எத்தனை எத்தனை வகை ! நூதனம் நூதனமாக எத்தனை இனம்! அவைகளுக்குப் பரிகாரமாக இக்கொடிய வேதனை! சென்ம பாவதோஷத்தினால் மனிதனுக்கு இயற்கையாயுள்ள பலவீனத்தை ஆற்றுகிறார். மனிதன் தன் உடலுக்குத் தபம் அவசியமென்று காட்டுகிறார் . இன்பசுக நாட்டத்தின் அடிமைத்தனத்தினின்று தப்பிக்க ஆசிக்கிறவர்கள் இக்கசையடியில் இயேசுவோடு ஒன்றிக்க வேண்டும் . ஒருத்தல் ஜெப முயற்சிகளால் தங்களைத் தாமே கசக்க வேண்டும். ஐம்புலன்களை அடக்காமல் ,ஈடேறலாம் என்று எண்ணி ஏமாந்து போகிறவர்கள், கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் காட்சியைக் கண்டு பொய்காரப் பேயை ஓட்ட வேண்டும்.

இயேசுவுக்கு நம் மேல் உள்ள அன்பு எத்தனை பெரிது ! எவ்வளவு தாராளமாய் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்கிறார் . இயேசுவின் ஒரு சொட்டு கண்ணீர் , ஒரு துளி இரத்தம் ஒரு உலகத்தை அல்ல ஓராயிரம் உலகத்தையே ஈடேற்றப் போதும் . ஆனால் மோகப் பேயின் வலையில் வீழ்ந்த மனிதனின் மனம் அதைக் கண்டு அசையாது . இக்கொடிய வாதனை தான் சில பேருக்காவது பாவத்தின் அக்கிரமத்தை உணர்த்தும் .இயேசுவின் அன்பை நாம் அறிய வருவோமாக

வியாகுலத்தாய் அதை அறிவார் . அவர்தான் ஆண்டவரின் அன்பின் பெருமையை நமக்கு விளக்க வேண்டும் . இச்சமயம் மாசற்ற மாமரி எங்கு இருந்தார் ? பிலாத்தின் அரன்மனையண்டை பழுதற்ற கன்னிகை இருந்தார் என்றனர் சிலர் . இக்கோரக் காட்சியை எவாறு அவர் சகிக்கக் கூடும் என்பாயோ ? அருகில் இல்லாவிட்டால் காட்சியால் இக்கண்ணறாவியை அவர் அவசியம் கண்டிருப்பார் . பல ஞானிகளின் எண்ணம் ஏதெனில் , பளீர் பளீர் என்னும் கசையின் அடியின் ஓசையையும் இயேசுவின் அனர்த்தத்தையும் பெருமூச்சையும் கேட்டார் , உள்ளது உள்ளபடி உணர்ந்தார் . தயையின் அரசி அதை எவ்விதம் தாங்கினார்?