Friday, August 5, 2022

மக்களை அனுப்பிவிடும்

மக்களை அனுப்பிவிடும்

இன்றைய (1 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 14:13-21)

மக்களை அனுப்பிவிடும்

'நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கும்' என்பது நம்மிடையே வழங்கப்படும் பழமொழி. இயேசு போதித்துக் கொண்டிருக்கின்றார். மாலை நேரம் ஆகின்றது. இடமும் பாலை நிலமாக இருக்கின்றது. இதைக் காண்கின்ற சீடர்கள் தாங்களாகவே முன்வந்து, 'உணவு வாங்கிக்கொள்ள மக்களை அனுப்பிவிடும்' என்று சொல்கின்றனர். வாழ்வுதரும் உணவைத் தங்களருகே வைத்துக்கொண்டு வயிற்றுக்கான உணவை மக்கள் வாங்கிக்கொள்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகின்றனர்.

தங்கள் அருகில் இருப்பவரின் வல்லமையை அவர்கள் மறந்துவிட்டனர். அதை விட, ஒரு பிரச்சினைக்கு இதுதான் வழி, இதுமட்டும்தான் வழி என்ற எண்ணத்தில் அவர்கள் மாற்று எண்ணங்களைச் சிந்திக்க மறந்துவிட்டனர்.

சீடர்கள் தங்கள் முன்னே உள்ள மூன்று பிரச்சினைகளைக் காண்கின்றனர்: ஒன்று, பாலை நிலம். இரண்டு, மாலை நேரம். மூன்று, மக்கள் கூட்டத்தின் பசி. பிரச்சினைகள் மூன்று என்றாலும் அவர்கள் தீர்வு என்னவோ ஒன்றாக - 'மக்களை அனுப்பிவிடுதல்' - இருக்கின்றது. இயேசு இன்னொரு தீர்வைக் காண முயற்சி செய்கின்றார். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.' இப்போதுதான் சீடர்கள் தங்கள் கைகளில் இருப்பதைக் காண முயற்சி செய்கின்றனர்.

அவர்களின் ஆலோசனையை இயேசு ஏற்க மறுத்ததுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்பை அவர்களிடமே கொடுக்கின்றார்.

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பல நேரங்களில் நாம் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை அப்படியே ஒதுக்கி அல்லது கூட்டித் தள்ளிவிட நினைக்கின்றோம்.

ஏன்?

நம் திறன்மேல் நம்பிக்கையின்மை.

தோல்வி பற்றிய பயம்.

முயற்சி எடுப்பதற்கான தயக்கம்.

இம்மூன்று காரணங்களுக்காக நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கின்றோம். நமக்கு நாமே பொய்க்காரணங்களை உருவாக்கிக்கொள்ளவும், மாயமான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இரு இறைவாக்கினர்களைக் காண்கின்றோம். அனனியா என்னும் பொய் இறைவாக்கினர், எரேமியா என்னும் உண்மையான இறைவாக்கினர். மக்கள், அரச அலுவலர்கள், மற்றும் அரசர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் பொருட்டு, 'எருசலேமுக்கு எதுவும் நேராது' எனப் பொய்யுரைக்கின்றார். அடிமைத்தனத்தின் அடையாளமாக எரேமியா அணிந்திருந்த மரத்தாலான நுகத்தை உடைத்துப் போடுகின்றார். ஆனால், எரேமியாவோ மரத்தாலான நுகம் இரும்பு நுகமாக மாறிவிட்டது என எச்சரிக்கின்றார்.

எதிரிகளின் படையெடுப்பு வரப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாலும், படையெடுப்பு நடைபெறாது என்று பிரச்சினையை அப்படியே முழுவதுமாக ஒதுக்கி விடுமாறு அரசருக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) என் வாழ்வின் பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனா? அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேனா?

(ஆ) என் பிரச்சினைகளை இறைவனின் கண்கொண்டு பார்க்கும்போது தீர்வுகளுக்கான வழிகள் அதிகம் என்பதை உணர்கின்றேனா?

(இ) மற்றவர்களை திருப்திப்படுத்த முயன்ற அனனியா உண்மையிலிருந்து பிறழ்கின்றார். மற்றவரைத் திருப்திப்படுத்துதல் அவருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே, பிறரைத் திருப்திப்படுத்தும் பழக்கம் விடுதல் நலம்.

தொட்டவர் யாவரும்

 

தொட்டவர் யாவரும் 

இன்றைய (2 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 14:22-36)

தொட்டவர் யாவரும் 

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், அப்பம் பலுகுதல் நிகழ்வு முடிந்தவுடன் இயேசு திருத்தூதர்களை கட்டாயமாக அனுப்பிவிட்டு தனியே இறைவேண்டல் செய்யச் செல்கின்றார். இரண்டாம் பகுதியில், இயேசு கடலின்மேல் நடக்கின்றார். பேதுருவும் இயேசுவைப் போல கடல்மேல் நடக்க முயற்சி செய்கின்றார். மூன்றாவது பகுதியில், மறுகரைக்கு வந்த இயேசுவிடம் உடல்நலமற்றோர் பலர் வருகின்றனர். 

'தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்' என்று நற்செய்திப் பகுதி நிறைவு பெறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் தொடுதல் இரண்டு நிலைகளில் நடக்கின்றது: ஒன்று, இயேசு பேதுருவைத் தொடுகின்றார். அதாவது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்று கத்திய பேதுருவை நோக்கிக் கையை நீட்டி அவரைப் பிடிக்கின்றார் இயேசு. இரண்டு, இயேசுவின் மேலுடையைத் தொடுகின்ற உடல்நலமற்றவர்கள் நலம் பெறுகின்றனர்.

ஆக, ஆண்டவரால் தொடப்படுகின்ற பேதுரு அச்சம் என்ற நோய் நீங்கப் பெறுகின்றார். ஆண்டவரைத் தொடுகின்ற மக்கள் தங்களின் உடல்நோய்கள் நீங்கப் பெறுகின்றனர். 

இந்த இரண்டுக்கும் முதன்மையாக இயேசு இறைவேண்டல் வழியாகத் தன் தந்தையைத் தொடுகின்றார்.

தொடுதல் இணைப்பின் அடையாளமாகவும், அச்சம் அகற்றுதலின் அடையாளமாகவும், நலம் தருதலின் அடையாளமாகவும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இரு நிலைகளில் இஸ்ரயேல் மக்களைத் தொடுகின்றார். அவருடைய முதல் தொடுதல் அடி போல அவர்கள்மேல் விழுகிறது. அவர்கள் காயம் அடைகின்றனர். இரண்டாம் தொடுதல் அவர்களுக்கு நலம் தருகின்றது. இறைவன் அவர்களை மீண்டும் அள்ளிக்கொள்கின்றார்.

இன்று இறைவன் நம்மைத் தொடுவதற்கு நம் அருகில் நிற்கின்றார். அவரைத் தொடுமாறும் நம்மை அனுமதிக்கின்றார்.

இது முறையல்ல..

 

இது முறையல்ல

இன்றைய (3 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 15:21-28)

இது முறையல்ல

நம் வாழ்க்கையில், 'இது முறை, இது முறையல்ல' என்பதைத் தாண்டிய விடயங்கள் இருக்கின்றன எனக் காட்டுகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

யாரும் தன்னைக் கவனித்துவிடக் கூடாது என்று புறவினத்து நகர ஊரில் பயணம் செய்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்வது முறையல்ல.

பெண் ஒருத்தி சாலையில் கத்திக்கொண்டு ஓடுவது முறையல்ல.

புறவினத்துப் பெண் ஒருத்தி, யூத ஆண்மகனிடம், அதுவும் சாலையில் நின்று பேசுவது முறையல்ல.

பேய்பிடித்த மகளின் தாய் ஒருத்தி, நடமாடும் போதகர் ஒருவரை வழியில் நிறுத்தி, 'தாவீதின் மகனே' எனப் புகழ்வது முறையல்ல.

'இவளை அனுப்பிவிடும், கத்திக்கொண்டே வருகிறாள்' என்று சீடர்கள் சொல்வது முறையல்ல.

உலகின் மீட்பராக வந்த ஒருவர் தன் பணியை இஸ்ரயேலுக்கென முடித்துக்கொள்வது முறையல்ல.

பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.

ஆம்! இவை முறையல்ல!

ஆனால், முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல வாழ்க்கை என்று காட்டுகிறாள் அந்தப் பெண்.

மேசையிலிருந்து சிதறிய துண்டுகளை நாய்க்குட்டிகள் திண்பது முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல. அது பசி, உரிமை, இயல்பு, எதார்த்தத்தைப் பொருத்தது.

முறை-முறையல்ல என்று சமூகம் வடிவமைத்த கட்டமைப்பை, தன் நம்பிக்கையால் உடைத்து எறிகின்றார் கானானியப் பெண். 

தான் வேண்டியது கிடைக்கு மட்டும் கத்துகின்றாள். தான் கத்தியதைப் பெறும் மட்டும் ஓடுகிறாள். நாய்க்குட்டிகள் அப்படித்தான். அவை கத்தும், ஓடும், பெற்றுக்கொள்ளும். 

மேசையில் இருப்பவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எதை?

அவர் இருப்பது மேல்.

நாய் இருப்பது கீழ்.

ஆனால், இருவருள்ளும் இருப்பது ஒரே ரொட்டித் துண்டு.

முறை-முறையல்ல என்ற இருதுருவப் பிளவை உடைக்கின்றார் அந்தப் பெயரில்லாப் பேதை.


புனித ஜான் மரிய வியான்னி..

 

இன்றைய (4 ஆகஸ்ட் 2022) திருநாள்

இன்றைய (4 ஆகஸ்ட் 2022) திருநாள்

புனித ஜான் மரிய வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஜான் மரிய வியான்னி

காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்றும் இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.

நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார். 

தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் சில பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியலில் ஒரு கோட்பாடு உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி. தன் செயல்களையும் தாண்டிய தன்மதிப்பை உணர்ந்தார்.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் எண்ணம், சிறுநுகர் வாழ்வு

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ணிப் பார்க்கும்போது இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி. 

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.

5. நிலைப்புத்தன்மை

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும்

மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

7. இலக்குத் தெளிவு

தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.

8. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்

தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

9. உடலில் தைத்த முள்

அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம். 

அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.

இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!

இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!


வாழ்வுக்கு ஈடாக..

வாழ்வுக்கு ஈடாக..

இன்றைய (5 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 16:24-28)

வாழ்வுக்கு ஈடாக

தமிழில் பொதுமொழிபெயர்ப்புக்கு நாம் கடந்து சென்றபோது நம் காதுகளுக்கு எளிதாக ஒலிக்காத சில வாக்கியங்களில் ஒன்றை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்: 'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?' (காண். மத் 16:25)

இதற்கு முந்தைய மொழிபெயர்ப்பில், 'தம் ஆன்மாவை', 'தம் ஆன்மாவுக்கு' என்று இருந்தது.

கிரேக்க மூலபாடத்தில், 'ப்ஸூகே' என்ற பதம் உள்ளது. இந்தச் சொல்லை மத்தேயு நற்செய்தியாளர் 16 முறை பயன்படுத்துகின்றார். 16 முறையும் ஐந்து பொருள்களில் பயன்படுத்துகின்றார்: ஒன்று, ஆவி, அல்லது உயிர் மூச்சு.இரண்டு, மனித ஆன்மா. மூன்று, நம் எண்ணங்கள், விருப்பங்கள், மற்றும் தெரிவுகள் உறையும் இடம். நான்கு, மனிதரின் தான்மை. ஐந்து, தனி மனிதர்.

காண்பவை, காணஇயலாதவை என உலக எதார்த்தங்களை இரு வகைகளாகப் பிரிக்கின்ற நற்செய்தியாளர், காண்பவற்றுக்காக காண இயலாதவற்றை விட்டுவிடலாகாது என எச்சரிப்பதுடன், காணஇயலாதவையே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன என அறிவுறுத்துகின்றார்.

பணம், புகழ், பெயர், மதிப்பு ஆகியவை காணக்கூடியவை. இவற்றையும் தாண்டிய தன்மதிப்பு, மாண்பு, தான்மை, இறைச்சாயல் ஆகியவை காண இயலாதவை.

சீடத்துவம் என்பது காணாதவற்றை நோக்கி நம் மனத்தைச் செலுத்துவது.

பனிமய அன்னையாக நாம் நினைவுகூர்கின்ற நம் அன்னை கன்னி மரியா காணாதவற்றை நோக்கியே வாழ்ந்தார்.