Friday, August 5, 2022

மக்களை அனுப்பிவிடும்

மக்களை அனுப்பிவிடும்

இன்றைய (1 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 14:13-21)

மக்களை அனுப்பிவிடும்

'நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கும்' என்பது நம்மிடையே வழங்கப்படும் பழமொழி. இயேசு போதித்துக் கொண்டிருக்கின்றார். மாலை நேரம் ஆகின்றது. இடமும் பாலை நிலமாக இருக்கின்றது. இதைக் காண்கின்ற சீடர்கள் தாங்களாகவே முன்வந்து, 'உணவு வாங்கிக்கொள்ள மக்களை அனுப்பிவிடும்' என்று சொல்கின்றனர். வாழ்வுதரும் உணவைத் தங்களருகே வைத்துக்கொண்டு வயிற்றுக்கான உணவை மக்கள் வாங்கிக்கொள்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகின்றனர்.

தங்கள் அருகில் இருப்பவரின் வல்லமையை அவர்கள் மறந்துவிட்டனர். அதை விட, ஒரு பிரச்சினைக்கு இதுதான் வழி, இதுமட்டும்தான் வழி என்ற எண்ணத்தில் அவர்கள் மாற்று எண்ணங்களைச் சிந்திக்க மறந்துவிட்டனர்.

சீடர்கள் தங்கள் முன்னே உள்ள மூன்று பிரச்சினைகளைக் காண்கின்றனர்: ஒன்று, பாலை நிலம். இரண்டு, மாலை நேரம். மூன்று, மக்கள் கூட்டத்தின் பசி. பிரச்சினைகள் மூன்று என்றாலும் அவர்கள் தீர்வு என்னவோ ஒன்றாக - 'மக்களை அனுப்பிவிடுதல்' - இருக்கின்றது. இயேசு இன்னொரு தீர்வைக் காண முயற்சி செய்கின்றார். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.' இப்போதுதான் சீடர்கள் தங்கள் கைகளில் இருப்பதைக் காண முயற்சி செய்கின்றனர்.

அவர்களின் ஆலோசனையை இயேசு ஏற்க மறுத்ததுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்பை அவர்களிடமே கொடுக்கின்றார்.

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பல நேரங்களில் நாம் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை அப்படியே ஒதுக்கி அல்லது கூட்டித் தள்ளிவிட நினைக்கின்றோம்.

ஏன்?

நம் திறன்மேல் நம்பிக்கையின்மை.

தோல்வி பற்றிய பயம்.

முயற்சி எடுப்பதற்கான தயக்கம்.

இம்மூன்று காரணங்களுக்காக நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கின்றோம். நமக்கு நாமே பொய்க்காரணங்களை உருவாக்கிக்கொள்ளவும், மாயமான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இரு இறைவாக்கினர்களைக் காண்கின்றோம். அனனியா என்னும் பொய் இறைவாக்கினர், எரேமியா என்னும் உண்மையான இறைவாக்கினர். மக்கள், அரச அலுவலர்கள், மற்றும் அரசர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் பொருட்டு, 'எருசலேமுக்கு எதுவும் நேராது' எனப் பொய்யுரைக்கின்றார். அடிமைத்தனத்தின் அடையாளமாக எரேமியா அணிந்திருந்த மரத்தாலான நுகத்தை உடைத்துப் போடுகின்றார். ஆனால், எரேமியாவோ மரத்தாலான நுகம் இரும்பு நுகமாக மாறிவிட்டது என எச்சரிக்கின்றார்.

எதிரிகளின் படையெடுப்பு வரப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாலும், படையெடுப்பு நடைபெறாது என்று பிரச்சினையை அப்படியே முழுவதுமாக ஒதுக்கி விடுமாறு அரசருக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) என் வாழ்வின் பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனா? அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேனா?

(ஆ) என் பிரச்சினைகளை இறைவனின் கண்கொண்டு பார்க்கும்போது தீர்வுகளுக்கான வழிகள் அதிகம் என்பதை உணர்கின்றேனா?

(இ) மற்றவர்களை திருப்திப்படுத்த முயன்ற அனனியா உண்மையிலிருந்து பிறழ்கின்றார். மற்றவரைத் திருப்திப்படுத்துதல் அவருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே, பிறரைத் திருப்திப்படுத்தும் பழக்கம் விடுதல் நலம்.

தொட்டவர் யாவரும்

 

தொட்டவர் யாவரும் 

இன்றைய (2 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 14:22-36)

தொட்டவர் யாவரும் 

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், அப்பம் பலுகுதல் நிகழ்வு முடிந்தவுடன் இயேசு திருத்தூதர்களை கட்டாயமாக அனுப்பிவிட்டு தனியே இறைவேண்டல் செய்யச் செல்கின்றார். இரண்டாம் பகுதியில், இயேசு கடலின்மேல் நடக்கின்றார். பேதுருவும் இயேசுவைப் போல கடல்மேல் நடக்க முயற்சி செய்கின்றார். மூன்றாவது பகுதியில், மறுகரைக்கு வந்த இயேசுவிடம் உடல்நலமற்றோர் பலர் வருகின்றனர். 

'தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்' என்று நற்செய்திப் பகுதி நிறைவு பெறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் தொடுதல் இரண்டு நிலைகளில் நடக்கின்றது: ஒன்று, இயேசு பேதுருவைத் தொடுகின்றார். அதாவது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்று கத்திய பேதுருவை நோக்கிக் கையை நீட்டி அவரைப் பிடிக்கின்றார் இயேசு. இரண்டு, இயேசுவின் மேலுடையைத் தொடுகின்ற உடல்நலமற்றவர்கள் நலம் பெறுகின்றனர்.

ஆக, ஆண்டவரால் தொடப்படுகின்ற பேதுரு அச்சம் என்ற நோய் நீங்கப் பெறுகின்றார். ஆண்டவரைத் தொடுகின்ற மக்கள் தங்களின் உடல்நோய்கள் நீங்கப் பெறுகின்றனர். 

இந்த இரண்டுக்கும் முதன்மையாக இயேசு இறைவேண்டல் வழியாகத் தன் தந்தையைத் தொடுகின்றார்.

தொடுதல் இணைப்பின் அடையாளமாகவும், அச்சம் அகற்றுதலின் அடையாளமாகவும், நலம் தருதலின் அடையாளமாகவும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இரு நிலைகளில் இஸ்ரயேல் மக்களைத் தொடுகின்றார். அவருடைய முதல் தொடுதல் அடி போல அவர்கள்மேல் விழுகிறது. அவர்கள் காயம் அடைகின்றனர். இரண்டாம் தொடுதல் அவர்களுக்கு நலம் தருகின்றது. இறைவன் அவர்களை மீண்டும் அள்ளிக்கொள்கின்றார்.

இன்று இறைவன் நம்மைத் தொடுவதற்கு நம் அருகில் நிற்கின்றார். அவரைத் தொடுமாறும் நம்மை அனுமதிக்கின்றார்.

இது முறையல்ல..

 

இது முறையல்ல

இன்றைய (3 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 15:21-28)

இது முறையல்ல

நம் வாழ்க்கையில், 'இது முறை, இது முறையல்ல' என்பதைத் தாண்டிய விடயங்கள் இருக்கின்றன எனக் காட்டுகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

யாரும் தன்னைக் கவனித்துவிடக் கூடாது என்று புறவினத்து நகர ஊரில் பயணம் செய்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்வது முறையல்ல.

பெண் ஒருத்தி சாலையில் கத்திக்கொண்டு ஓடுவது முறையல்ல.

புறவினத்துப் பெண் ஒருத்தி, யூத ஆண்மகனிடம், அதுவும் சாலையில் நின்று பேசுவது முறையல்ல.

பேய்பிடித்த மகளின் தாய் ஒருத்தி, நடமாடும் போதகர் ஒருவரை வழியில் நிறுத்தி, 'தாவீதின் மகனே' எனப் புகழ்வது முறையல்ல.

'இவளை அனுப்பிவிடும், கத்திக்கொண்டே வருகிறாள்' என்று சீடர்கள் சொல்வது முறையல்ல.

உலகின் மீட்பராக வந்த ஒருவர் தன் பணியை இஸ்ரயேலுக்கென முடித்துக்கொள்வது முறையல்ல.

பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.

ஆம்! இவை முறையல்ல!

ஆனால், முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல வாழ்க்கை என்று காட்டுகிறாள் அந்தப் பெண்.

மேசையிலிருந்து சிதறிய துண்டுகளை நாய்க்குட்டிகள் திண்பது முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல. அது பசி, உரிமை, இயல்பு, எதார்த்தத்தைப் பொருத்தது.

முறை-முறையல்ல என்று சமூகம் வடிவமைத்த கட்டமைப்பை, தன் நம்பிக்கையால் உடைத்து எறிகின்றார் கானானியப் பெண். 

தான் வேண்டியது கிடைக்கு மட்டும் கத்துகின்றாள். தான் கத்தியதைப் பெறும் மட்டும் ஓடுகிறாள். நாய்க்குட்டிகள் அப்படித்தான். அவை கத்தும், ஓடும், பெற்றுக்கொள்ளும். 

மேசையில் இருப்பவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எதை?

அவர் இருப்பது மேல்.

நாய் இருப்பது கீழ்.

ஆனால், இருவருள்ளும் இருப்பது ஒரே ரொட்டித் துண்டு.

முறை-முறையல்ல என்ற இருதுருவப் பிளவை உடைக்கின்றார் அந்தப் பெயரில்லாப் பேதை.


புனித ஜான் மரிய வியான்னி..

 

இன்றைய (4 ஆகஸ்ட் 2022) திருநாள்

இன்றைய (4 ஆகஸ்ட் 2022) திருநாள்

புனித ஜான் மரிய வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஜான் மரிய வியான்னி

காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்றும் இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.

நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார். 

தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் சில பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியலில் ஒரு கோட்பாடு உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி. தன் செயல்களையும் தாண்டிய தன்மதிப்பை உணர்ந்தார்.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் எண்ணம், சிறுநுகர் வாழ்வு

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ணிப் பார்க்கும்போது இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி. 

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.

5. நிலைப்புத்தன்மை

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும்

மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

7. இலக்குத் தெளிவு

தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.

8. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்

தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

9. உடலில் தைத்த முள்

அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம். 

அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.

இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!

இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!


வாழ்வுக்கு ஈடாக..

வாழ்வுக்கு ஈடாக..

இன்றைய (5 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 16:24-28)

வாழ்வுக்கு ஈடாக

தமிழில் பொதுமொழிபெயர்ப்புக்கு நாம் கடந்து சென்றபோது நம் காதுகளுக்கு எளிதாக ஒலிக்காத சில வாக்கியங்களில் ஒன்றை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்: 'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?' (காண். மத் 16:25)

இதற்கு முந்தைய மொழிபெயர்ப்பில், 'தம் ஆன்மாவை', 'தம் ஆன்மாவுக்கு' என்று இருந்தது.

கிரேக்க மூலபாடத்தில், 'ப்ஸூகே' என்ற பதம் உள்ளது. இந்தச் சொல்லை மத்தேயு நற்செய்தியாளர் 16 முறை பயன்படுத்துகின்றார். 16 முறையும் ஐந்து பொருள்களில் பயன்படுத்துகின்றார்: ஒன்று, ஆவி, அல்லது உயிர் மூச்சு.இரண்டு, மனித ஆன்மா. மூன்று, நம் எண்ணங்கள், விருப்பங்கள், மற்றும் தெரிவுகள் உறையும் இடம். நான்கு, மனிதரின் தான்மை. ஐந்து, தனி மனிதர்.

காண்பவை, காணஇயலாதவை என உலக எதார்த்தங்களை இரு வகைகளாகப் பிரிக்கின்ற நற்செய்தியாளர், காண்பவற்றுக்காக காண இயலாதவற்றை விட்டுவிடலாகாது என எச்சரிப்பதுடன், காணஇயலாதவையே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன என அறிவுறுத்துகின்றார்.

பணம், புகழ், பெயர், மதிப்பு ஆகியவை காணக்கூடியவை. இவற்றையும் தாண்டிய தன்மதிப்பு, மாண்பு, தான்மை, இறைச்சாயல் ஆகியவை காண இயலாதவை.

சீடத்துவம் என்பது காணாதவற்றை நோக்கி நம் மனத்தைச் செலுத்துவது.

பனிமய அன்னையாக நாம் நினைவுகூர்கின்ற நம் அன்னை கன்னி மரியா காணாதவற்றை நோக்கியே வாழ்ந்தார்.


Sunday, July 31, 2022

செல்லும் செல்வம்!

செல்லும் செல்வம்!

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

I. சபை உரையாளர்  1:2, 2:21-23 கொலோசையர் 3:1-5, 9-11

லூக்கா 12:13-21

செல்லும் செல்வம்!

'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது.  ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா?  செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். 'பெயரில்லாத இந்த நபரில்' நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?' என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: 'என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?' முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி அறிவுரையாக மாறுகின்றது: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!' என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.

தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். 'அறிவற்ற செல்வன்' என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தச் செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. 'என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,' 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!' என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவன் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேனேஜர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், 'தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது' என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொறுத்தவரையில் தவறாகின்றன.

செல்வரின் உள்ளக்கிடக்கையை 'தன் உள்ளம் பேசுதல்' (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

'நான் என்ன செய்வேன்?' என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: 'நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,' 'என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,' என் நெஞ்சிடம் சொல்வேன்!' மேலும், 'நான்,' 'என்,' 'எனது' என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

'என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!' என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு 'உண், களி, கொண்டாடு' என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார். 

இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: 'அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?' என்று கேட்கிறார் கடவுள். 'என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!' என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். 'மகிழ்ந்திரு' (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை 'முட்டாள்' (அஃப்ராய்ன்) என தன் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். 'எல்லாம் எனக்கே' என்று நினைத்த செல்வரிடம், 'இதெல்லாம் வேறொருவருடையதாகும்!' என்கிறார் கடவுள். 

12:21ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: 'கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!' ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. 'வீண், முற்றிலும் வீண்!' என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், 'வீண்' என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். 'உழைப்பு,' 'இன்பம்,' 'ஞானம்,' 'அறிவு,' 'சட்டம்' என அனைத்தும் 'வீண்' என்று காரசாரமாக விவாதிக்கின்றார். 'வீண்' என்பதன் எபிரேய வார்த்தை 'ஹேபல்.' இந்த வார்த்தைக்கு 'காற்று' அல்லது 'மூச்சு' என்றும், 'நகரக்கூடியது' என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை 'வீண்' என்று மொழிபெயர்க்கிறோம். 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் 'இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!' என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், 'ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். 'எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?' மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.

இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

'நிலையானவை-நிலையற்றவை' என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, 'மேல்-கீழ்' என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது 'மேலே பார்த்துக் கொண்டிருப்பது' என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

ஆக, நிலையற்றவற்றை நாடுவது பழைய இயல்பு. நிலையானவற்றை நாடுவது புதிய இயல்பு.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, செல்வம் என்பது வாழ்வு தராமல் செல்லும் என்றும், அது தரும் வாழ்வும் வேகமாகச் செல்லும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.

இன்று இந்த வாசகங்கள் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. செல்வம் என்னும் விநோதம்

'செல்வம் சேர்ப்பது' என்பது எல்லா உயிரினங்களின் வாழ்வியல் தேவை. அரிசியைச் சேகரிக்கும் எறும்பு, கூடு கட்டுவதற்கு முள்களை சேகரிக்கும் காகம், குழியைப் பறித்து சுகமாக அமர்ந்து கொள்ளும் நாய்க்குட்டி, புற்றுக்களைக் கட்டி குடிபுகும் கரையான், பாம்பு என தாழ்நிலை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் உணவையும், உறைவிடத்தையும் சேகரிக்கின்றன. ஆக, செல்வம் சேர்த்தல் என்பது உயிரின் ஒரு பரிமாணம். சேர்த்து வைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது வாழ்க்கை நியதி. இப்படியிருக்க, செல்வம் சேர்த்தல் எப்படி மனித இனத்திற்குப் பாவமாக முடியும்? 'அவனன்றி அணுவும் அசையாது' என்பது முதியோர் வாக்கு. 'அவனன்றி கூட எல்லாம் அசைந்துவிடும். ஆனால், அது (பணம்) அன்றி எதுவும் அசையாது' என்பது இன்றைய வாக்கு. 'செல்வம் தேவையில்லை' என்று நான் இப்போது எழுதுவதற்குக் கூட செல்வம் தேவை - கணினி, மென்பொருள், என் ஓய்வு நேரம், மின்சாரம், அறை, இணைய இணைப்பு, மோடம், சிம்கார்ட். இந்த இரண்டு வார்த்தைகளை நான் எழுதி அவை உங்களை வந்து சேர்வது செல்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆக, செல்வம் தேவையில்லை என்று நான் சொன்னால் அது அறிவன்று. செல்வம் வேண்டும், செல்வம் வேண்டாம் என்னும் இரண்டு வட்டங்களின் வரையறை மயிரிழை அளவு வித்தியாசமே. பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரும், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார். 'அவ்வுலகம்' இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது வேகமாக மறைந்து வருகிறது. ஆனால், இவ்வுலகமும், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதும் வேகமாக நினைவிற்கு வருகிறது!

2. 'நான்' என்னும் செல்வம்

நாம் கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியும், முகம் பார்த்து சிகை சீவும் கண்ணாடியும் ஒரே கண்ணாடிதான். ஆனால், மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் நமக்கு அடுத்தவர் தெரிகிறார். முகம் பார்க்கும் கண்ணாடி வழி பார்த்தால் நாம் மட்டுமே தெரிகிறோம். எப்படி? கண்ணாடியின் பின் இருக்கும் வெள்ளிப்பூச்சு. வெள்ளி நம்மை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. இதுதான் வெள்ளியின் ஆபத்து. நாம் இன்றைய நற்செய்தியில் காணும் செல்வருக்குத் தெரிவதெல்லாம் அவரும், அவருடைய வயலும், அறுவடையும், தானிய மூட்டைகளும், களமும், கிடங்கும், நெஞ்சமும், மகிழ்ச்சியும்தான். அவருடைய வேலியைத் தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் நாய்க்குட்டியைப் பிடித்து நடந்து செல்கிறார் என்றால், கொஞ்ச நேரத்தில் 'அவர் நாய்க்குட்டியைப் பிடித்திருக்கிறார்' என்ற நிலை, 'நாய்க்குட்டி அவரைப் பிடித்திருக்கும்' நிலையாக மாறிவிடுகிறது. செல்வமும் அப்படித்தான். நாம் கொஞ்சம், கொஞ்சமாக வைத்திருக்கும் செல்வம், காலப்போக்கில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. 

3. 'உழைப்பு' என்னும் 'வீண்'

'முயற்சி திருவினையாக்கும்,' 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்,' 'கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை' என்று கடின உழைப்பு பற்றியும், முயற்சியும் பற்றி நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இந்த எல்லா அறிவுரைகளையும் 'வீண்' என்ற ஒற்றை வார்த்தையில் எழுதி முடித்து பேனாவை வீசி எறிகின்றார் சபை உரையாளர். உழைப்பு வீணா? உழைப்பால் பயனில்லையா? உழைப்பு இல்லை என்றால் இன்று நாம் குரங்குகளாகத்தானே இருந்திருப்போம். நாம் இரண்டு கால்களில் நிற்கத் தொடங்கியது முதல், இன்று கால்களே இல்லாமல் பறக்கத் தொடங்கியது வரை எல்லாவற்றுக்கும் காரணம் உழைப்பும், முயற்சியும்தானே. நாம் இன்று கவினுறு முறையில் படைத்திருக்கும் உலகம், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அரசியல், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம் நம் முயற்சியும், உழைப்பும்தானே. உழைப்பு வீண் அல்ல. ஆனால், உழைப்புதான் எல்லாம் என நினைத்து ஓய்வு, குடும்பம், உறவுகள், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை மறப்பது சால்பன்று. உழைப்பு மட்டும் எல்லாம் அல்ல. உழைப்பின் கனிகளையும் சுவைக்க ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் 60 வருடங்கள் வாழ்கிறோம் என வைத்துக்கொள்வோம். இந்த 60 வருடங்களுக்குத் தேவையானவற்றை நாம் உழைத்து வைத்தால் போதாதா? 'நாளை என்ன நடக்கும்?' என்ற பயமும், 'இது போதாது!' என்ற எண்ணமும், 'அவனிடம் அதிகம் இருக்கிறது' என்ற ஒப்பீடும் நம்மை உழைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது. 'என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை' என்ற துணிச்சலும், 'இது போதும்!' என்ற எண்ணமும, 'என்னிடமும் எல்லாம் இருக்கிறது!' என்ற நிறைவும்தான் மாற்று மருந்து.

4. புது விளையாட்டு விதி

'விளையாட்டு முடியும்போது யாரிடம் அதிகம் பொம்மைகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்' என்று நாம் ஒரு விதியை உருவாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீடு, வாசல், பெயர், புகழ், பொன், நிலம் என நிறைய பொம்மைகளைச் சேர்த்து வைக்கின்றோம். ஆனால், அந்த பொம்மைகள் நம்மிடம் நிறைய இருந்தாலும் அவற்றை அப்படியே அடுத்த விளையாட்டுக்காரருக்கு (வீட்டுக்காரருக்கு) விட்டுச் செல்கின்றோம். பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய விளையாட்டு விதியை அறிமுகம் செய்கின்றார்: 'இவ்வுலகில் நாம் விளையாடிக் கொண்டிருந்தாலும், நம் கண்கள் எப்போதும் மேலுலகு என்னும் கோல்-போஸ்டில் தான் இருக்க வேண்டும்!' நம் எண்ணங்கள், ஓட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும். நம் பழைய ஜெர்ஸியை அகற்றவிட்டு, புதிய ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொண்டால், 'இவர் பெரியவர், அவர் சிறியவர்' என்ற வேற்றுமை எண்ணமும், 'இந்த இன்பம் மட்டும் போதும்!' என்ற இன்பத் தேடலும் முடிவுக்கு வரும்.

நாம் ஒரு நாணயத்தைக் காட்டி, 'இது செல்லுமா!' என்கிறோம். 'செல்லும்' நாணயங்கள்தாம் நம் 'செல்வம்.' 'செல்லா' நாணயங்கள் நம் செல்வங்கள் அல்லவே! ஆக, 'செல்வதும்,' 'செல்வமும்'  நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல எப்போதும் இணைந்தே இருக்கின்றன. 'நம் கையைவிட்டு செல்வதால்தான் அது செல்வம்' என்றும், 'செல்வம் கண்டிப்பாக செல்லும்' என்றும் உணரத்தொடங்கினால், நாம் 'அறிவான செல்வர்கள்!


Tuesday, July 26, 2022

புனித பெரிய யாக்கோபு

புனித பெரிய யாக்கோபு


இன்றைய (25 ஜூலை 2022) திருவிழா

நாளை திருத்தூதரான தூய யாகப்பரின் - யாக்கோபு - திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!

நாளைய நற்செய்தியில் இவரின் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய இவரின் தாய் இவரையும், இவரின் தம்பி யோவானையும் அழைத்துக்கொண்டு இயேசுவிடம் சென்று, 'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும் அமருமாறு செய்யும்' என்கிறார்.

பள்ளியின் ஆண்டுவிழா அல்லது கலைவிழா நேரத்தில் தன் குழந்தையைக் கூட்டி வரும் தாய் தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம், 'என் மகளுக்கு, மகனுக்கு இந்த டான்ஸ் வேண்டும், அந்த நாடகத்தில் இந்த வேடம் வேண்டும்' எனக் கேட்பதுபோல இருக்கிறது இந்நிகழ்வு.

இப்படி ஒரு அம்மா கிடைக்க இந்த இரண்டு மகன்களும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

'என் மகன் உன் பின்னாலே திரியுறானே, வீட்டிற்கும் வருவதில்லை, மீன்பிடிக்கவும் செல்வதில்லை. இப்படியே போனால் என்ன ஆவது? ரெண்டுல ஒன்னு சொல்லு!' என்று இயேசுவிடம் முறையிடுகின்றார் இந்த அன்புத்தாய்.

ஆனால், இயேசு கழுவுற மீனுல நழுவுற மீனாய் 'நீங்க கிண்ணத்துல குடிப்பீங்களா?' 'தட்டுல சாப்பிடுவீங்களா?' என்கிறார். 'என் வாழ்வின் பொருள் என்ன?' என்று நான் இயேசுவிடம் செல்லும்போதும் அவர் இப்படி என்னை அலைக்கழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. பின் எதன்தான் செய்வது? யாருக்கு எது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கோ அது அவருக்கு அருளப்படும். அதுவரைக்கும்?

செய்ற வேலையைச் செய்வோம் - யாக்கோபும், யோவானும், நாமும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 4:7-15), 'கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' என எழுதுகிறார்.

'மண்பாண்டத்தில் செல்வம்' என்னும் இந்த உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த உருவகத்தைப் புரிந்துகொள்ள பவுலின் சமகாலச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம். பவுலின் சமகாலத்தில் கடவுள் வழிபாட்டுக்குப் பொன், உணவு உண்ண வெள்ளி, மலம் மற்றும் சிறுநீர் சேகரிக்க மண், உமிழ்நீர் துப்ப மரம் என்று நான்கு வகைகளான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், வீட்டுத் தலைவர் பொன் மற்றும் வெள்ளி பாத்திரங்களைக் கையாள்வார். மண் மற்றும் மரப் பாத்திரங்களை அடிமைகள் கையாள்வர். மண் மற்றும் மரப் பாத்திரங்கள் தாழ்வானவற்றுக்குப் பயன்பட்டதால் அவை வீட்டிற்கு வெளியே வைக்கப்படும். மழை மற்றும் வெயில் என அனைத்துக் காலங்களிலும் வெளியே கிடக்கும். மதிப்பற்றவற்றுக்குப் பயன்படுவதால் அவை மதிப்பின்றிக் கிடக்கும்.

பவுல் தான் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகத் தன் பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து, கடவுளின் அழைப்பு தனக்குச் செல்வம் போல வந்தது என்கின்றார். 

மலம் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தில் திடீரென பொன் மற்றும் புதையலை வைத்தால் என்ன ஆகும்? மண்பாண்டத்தின் மதிப்பு கூடும். மண்பாண்டம் வீட்டிற்குள் வைத்துப் பாதுகாக்கப்படும். ஆனால், அந்த மண்பாண்டத்தின் மதிப்பைக் கூட்டுவது அதன் உள்ளே இருக்கும் பொன் மற்றும் புதையல்தாம். ஆக, திருத்தூதர்கள் எளியவராக இருந்தபோது இறைவன் அவர்களைத் தெரிவு செய்து, தன் அழைத்தல் என்னும் பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றார்.

மண்பாண்டம் தன்னிலே வலுவற்றது, மதிப்பற்றது, தாழ்வானது. இருந்தாலும், வீட்டுத் தலைவர் அதைத் தெரிந்துகொள்கின்றார்.

திருத்தூது நிலைக்கு உயர்த்தப்பெற்ற யாக்கோபு கடற்கரையில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது மண்பாண்டம் போல இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு அவர்களைத் தன் இறையாட்சிக்குப் பணிக்கு அழைக்கின்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மனிதரைப் பிடிப்பவர் ஆகின்றார்.

இந்த உருவகமும் திருநாளும் நமக்குச் சொல்வது என்ன?

(அ) கடவுள் நம் எளிய நிலையில் நம்மைத் தெரிந்துகொள்கின்றார். நம் மதிப்பை உயர்த்துகின்றார். 

(ஆ) மண்பாண்டம் போல நாமும் வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கின்றோம். இறைவன் நம் நொறுங்குநிலையைத் தழுவிக்கொள்கின்றார்.

(இ) மண்பாண்டத்தில் இப்போது செல்வம் இருப்பதால் அது முன்பு இருந்ததை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனக்கு உள்ளே இருக்கின்ற அந்தப் புதையலைத் தற்காத்துக்கொள்ளும் வண்ணம் அது தன்னையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்மதிப்புக்கு ஒதுக்கப்பெற்ற அந்த மண்பாண்டம் இனி தாழ்வானவற்றின் பக்கம் செல்தல் கூடாது.

திருத்தூதர் யாக்கோபிடம் விளங்கிய துணிவும் மனத்திடமும் நாமும் பெற இறைவேண்டல் செய்வோம்.